அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை.. கோவை, நீலகிரிக்கு விரைந்தது பேரிடர் மீட்புப் படை!!
கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்துக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து அங்கு மாநில பேரிடர் மீட்புப் படை விரைந்துள்ளது.
முன்னதாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடக்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும். இதன் காரணமாக இன்று முதல் மே.27 வரை கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
குறிப்பாக மே 25, 26 ஆம் தேதிகளில் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதை அடுத்து கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்துக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மக்களே உஷார்... அடிச்சு ஊத்த போகும் மழை... 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!
இந்நிலையில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நீலகிரி, கோவைக்கு பேரிடர் மீட்புப் படை அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. கோவை, நீலகிரிக்கு 3 மாநில பேரிடர் மீட்புப் படையும் ஊட்டி, வால்பாறை பகுதிகளுக்கு தலா ஒரு தேசிய பேரிடர் மீட்புப் படையும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கோவை, நீலகிரி மாவட்ட ஆட்சியர்களுடன் பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். மாவட்ட தீயணைப்புத் துறை, மின்சாரம், நெடுஞ்சாலைத்துறை என அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்; தீவிரமடையும் மழை.. மீனவர்களுக்கு எச்சரிக்கை!!