விஜய் அமைச்சரவையில் விசிக இணையுமா? திருமா. பரபரப்பு பேட்டி..!
அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து திருமாவளவன் விளக்கம் கொடுத்தார்.
தமிழக அரசியலில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளன. தமிழக வெற்றிக் கழக தலைவர் ஜோசப் விஜய் தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்ட நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை அமைச்சரவையில் இணைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்புக்கு நன்றி தெரிவித்த விசிக தலைவர் தொல். திருமாவளவன், கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து முடிவு எடுப்பதாக அறிவித்துள்ளார். இந்தச் சூழல் தமிழக அரசியலில் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
தவெக தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக மற்றும் ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. முதலமைச்சர் விஜய் உடன் சில அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில், அமைச்சரவை விரிவாக்கம் இந்த வாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சூழலில் தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களைச் சந்தித்தபோது, விசிக தலைவர் திருமாவளவன் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என முதலமைச்சர் விஜய் விரும்புவதாகத் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியும் அமைச்சரவையில் இணைய வேண்டும் என வலியுறுத்தப்படுவதாக அவர் கூறினார்.
இதையும் படிங்க: அமைச்சர் பதவி வாங்கிக்கலாமா? வேணாமா? தவெக அமைச்சரவையில் இடம் பெறுவது குறித்து திருமா குழப்பம்!!
இந்த அழைப்புக்கு பதிலளித்த திருமாவளவன், “தவெகவின் அழைப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தொடங்கினார். மே 8-ம் தேதி விசிக உயர்நிலைக் கூட்டத்தில் பெரும்பாலானோர் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என விருப்பம் தெரிவித்தனர் என்றும், இறுதியில் தலைவரின் முடிவுக்கு கட்டுப்படுவதாக உறுதி அளித்தனர் என்றும் அவர் நினைவுகூர்ந்தார். அடுத்த நாள் பொதுச் செயலாளர்கள், பொருளாளர் உள்ளிட்டோருடன் ஆலோசித்து, அமைச்சரவையில் இடம்பெறாமல் நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க முடிவு செய்ததாகவும் தெரிவித்தார். அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்று நேரடி அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் கலந்து ஆலோசித்து முடிவு தெரிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: வாங்க முதல்வரே..! வீடு தேடி வந்த முதல்வர் விஜய்... வாசலில் காத்திருந்து வரவேற்ற திருமா..!