அமைச்சர் பதவி வாங்கிக்கலாமா? வேணாமா? தவெக அமைச்சரவையில் இடம் பெறுவது குறித்து திருமா குழப்பம்!!
த.வெ.க., அமைச்சரவையில் இடம் பெற வேண்டாம் என்பது என் நிலைப்பாடு; இடம் பெற வேண்டும் என்பது கட்சியில் பெரும்பாலானோர் நிலைப்பாடு, என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம்: தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.,) அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி (வி.சி.க.,) இடம் பெற வேண்டாம் என்பது தனது தனிப்பட்ட நிலைப்பாடு என்றும், கட்சியில் பெரும்பாலானோர் இடம் பெற வேண்டும் என விரும்புவதாகவும் வி.சி.க., தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
படப்பை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், “காட்டுமன்னார்கோவில் தொகுதியில் நான் வெற்றி பெற்றிருந்தால் இன்றைய அரசியல் களத்தில் பல திருப்பங்கள் ஏற்பட்டிருக்கும்” என்றார். தேர்தலுக்கு முன்பே திராவிடக் கட்சிகள் பலவீனப்படக்கூடாது என வி.சி.க., தெளிவான நிலைப்பாடு எடுத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அதிமுக பாதுகாப்பாகவும், திமுக வலிமையுடனும் இருக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாகக் கூறினார்.
லோக்சபா தேர்தலில் 11 சதவீத வாக்குகள் பெற்ற பாஜகவின் வாக்கு வங்கி 2.5 சதவீதமாகக் குறைந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய திருமாவளவன், திராவிடக் கட்சிகளை பலவீனப்படுத்தி விட்டு யார் இங்கு நிரப்பப் போகின்றனர் என்பது முக்கிய கேள்வி என்றார். காலப்போக்கில் த.வெ.க., - பாஜக என்ற நிலை உருவாகும் அபாயம் உள்ளதால், திராவிடக் கட்சிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என எச்சரித்தார்.
இதையும் படிங்க: "SOFA பிரச்சனை"..! உதயநிதி விமர்சனத்திற்கு டாட் வைத்த திருமா..!
“பதவிதான் முக்கியம் என்றால் காங்கிரஸுக்கு முன்பே த.வெ.க., அரசில் சேர்ந்திருக்க முடியும். ஆனால் த.வெ.க., அமைச்சரவையில் இடம் பெற வேண்டாம் என்பது எனது நிலைப்பாடு. கட்சியில் பெரும்பாலானோர் இடம் பெற வேண்டும் என விரும்புகின்றனர்” என்று திருமாவளவன் வெளிப்படையாகக் கூறினார்.
தீர்க்கமான முடிவு எடுக்க கால அவகாசம் தேவைப்படுவதாகவும், தான்தோன்றித்தனமாக முடிவெடுக்க விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார். கட்சிக்குள் விவாதம் நடைபெற்று வருவதாகவும், அதன் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்றும் சொன்னார். தற்போது வரை அமைச்சரவையில் பங்கேற்பதில்லை என்பதில் உறுதியாக இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.
திருமாவளவனின் இந்தக் கருத்து வி.சி.க.,வுக்குள் உள்ள கருத்து வேறுபாட்டை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. ஒருபுறம் கட்சி நிர்வாகிகள் பலர் அமைச்சர் பதவியை விரும்பினாலும், திருமாவளவன் தனது அரசியல் கொள்கை அடிப்படையில் தீர்மானமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அதிமுக-வில் பிளவு? நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து திருமாவளவன் சொன்ன 'பரபரப்பு' கருத்து!