×
 

“போலீஸாரை திரும்பப் பெற முடியாது!” – திருப்பரங்குன்றம் மலை பாதுகாப்பு விவகாரத்தில் மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி!

பாதுகாப்பு காரணங்களுக்காகத் திருப்பரங்குன்றம் மலையில் காவல்துறை இருப்பது அவசியம் என மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களைத் திரும்பப் பெறக் கோரித் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, “காவல்துறையே அந்த இடத்தில் இருக்கக் கூடாது என்பது போன்ற வாதம் ஏற்கத்தக்கதல்ல” எனத் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை மேற்பார்வைப் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள போலீஸாரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும், கோயில் சொத்துக்கள் மற்றும் பக்தர்களின் மத நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கக் கூடாது என்றும் கோரி எழுமலையைச் சேர்ந்த ராம. ரவிக்குமார் என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று நீதிபதி ஸ்ரீமதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மலைப் பகுதியில் அமைதியைப் பேணவும் பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல்துறை இருப்பது அவசியம் எனத் தெரிவித்த நீதிபதி, இது தொடர்பாக மதுரை மாநகரக் காவல் ஆணையர் மற்றும் கோயில், தர்கா நிர்வாகங்கள் விரிவான பதில்மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

மதுரை திருப்பரங்குன்றம் மலைப் பகுதியில் நிலவும் மத வழிபாட்டு உரிமைகள் மற்றும் பாதுகாப்புப் பணிகள் தொடர்பான வழக்கை இன்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு விசாரித்தது. மனுதாரர் ராம. ரவிக்குமார் தனது மனுவில், “கோயிலுக்குச் சொந்தமான மலைப் பகுதியில் பக்தர்கள் மேற்கொள்ளும் மத நடவடிக்கைகளுக்குக் காவல்துறை தடை விதிக்கக் கூடாது; அங்குப் பாதுகாப்புப் பணியில் உள்ள போலீஸாரைத் திரும்பப் பெற வேண்டும்” என வலியுறுத்தியிருந்தார். மேலும், கோயில் சொத்துக்கள், தல மரம் மற்றும் நடைபாதைகளைப் பாதுகாக்கக் கோயில் நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.

இதையும் படிங்க: "இது திட்டமிட்ட கொலை; திமுக அரசுதான் முழு காரணம்" - நயினார் நாகேந்திரன் ஆவேசம்!

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி ஸ்ரீமதி, “காவல்துறை அந்த இடத்தில் இருக்கவே கூடாது என்பது போல் மனுதாரர் கூறுவது ஏற்புடையதல்ல” எனக் கருத்துத் தெரிவித்தார். சட்டம்-ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காகக் காவல்துறையின் இருப்பு அவசியமானது என்பதை நீதிபதி சுட்டிக்காட்டினார். அப்போது அரசின் தலைமை வழக்கறிஞர் குறுக்கிட்டு, “இதுவரை அந்தப் பகுதியில் பாதுகாப்புத் தொடர்பாக இத்தகைய புகார்கள் எழுந்ததில்லை” எனத் தெரிவித்தார். அதற்கு நீதிபதி, “ஏற்கனவே கொடிமரத்தில் கொடியேற்றக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாகத் தெரிகிறது; அவ்வாறெனில் அதன்படி முறையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் அல்லவா?” எனக் கேள்வி எழுப்பினார்.

திருப்பரங்குன்றம் மலையானது இரு மதத்தினரும் வழிபடக்கூடிய இடமாக விளங்குவதால், அங்கு நிலவும் சிக்கல்களை முழுமையாக ஆராய நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இதன்படி, மதுரை மாநகரக் காவல் ஆணையர், திருப்பரங்குன்றம் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர், செயல் அலுவலர் மற்றும் தர்கா பரம்பரை அறங்காவலர் ஆகியோர் இந்த விவகாரம் குறித்து விரிவான பதில்மனுவைத் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். சமூக நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையிலான நடவடிக்கைகள் எதற்கும் அனுமதி அளிக்க முடியாது என்பதை உறுதி செய்த நீதிபதி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஜனவரி 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: "பக்தர்கள் தீவிர முடிவு எடுக்க வேண்டாம்" - அண்ணாமலை உருக்கமான வேண்டுகோள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share