"படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில்!" திமுகவை வறுத்தெடுத்த நயினார் நாகேந்திரன்!
இந்துக்கள் - இஸ்லாமியர்கள் ஒற்றுமையைத் திமுக அரசு விரும்பவில்லை என்று நெல்லையில் நயினார் நாகேந்திரன் விமர்சனம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு மற்றும் காவல்துறையின் செயல்பாடுகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் குறித்துப் பேசிய அவர், ஏற்கனவே இங்கிலாந்து நீதிமன்றம் வரை சென்று, 'குன்றம் குமரனுக்கே சொந்தம்' எனத் தீர்ப்பு வந்துள்ளது. தற்போது தீபம் ஏற்றலாம் எனத் தீர்ப்பு வந்த பிறகும், தீபம் ஏற்றச் சென்ற பக்தர்களைக் காவல்துறை தடுத்து நிறுத்தித் தள்ளுமுள்ளு ஏற்படுத்தியுள்ளது.
கோயிலுக்கு எதிரான செயல்கள் என்றால் மட்டும் முதல்வரின் காவல்துறை உடனடியாக அங்கு வந்து விடுகிறது. தென்காசியில் வழக்கறிஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டபோது வேடிக்கை பார்த்த காவல்துறை, சாமி கும்பிடச் செல்பவர்களை மட்டும் தடுக்கிறது என்று சாடினார்.
இதையும் படிங்க: மதுரையில் ரோட்டையும், மேயரையும் முதல்வர் கண்டுபிடிக்கணும்! - ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை!
மேலும் அவர் பேசுகையில், இஸ்லாமிய அமைப்புகள் இதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒன்றாகவே உள்ளனர். ஆனால், தேர்தல் நெருங்குவதால் தோல்வி பயத்தில் இருக்கும் திமுக அரசு, வாக்கு வங்கிக்காக மக்களிடையே பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொள்கிறது. கலவரத்தை உருவாக்க வாய்ப்பே இல்லாத இடத்தில், 144 தடை உத்தரவு போட்டு, போலீசைத் தூண்டிவிட்டுப் பிரச்சனையை உருவாக்கியது தமிழக அரசுதான். இஸ்லாமியர்களின் வாக்குகளைப் பெறுவதற்காகத் திமுக ஒருதலைப்பட்சமாகச் செயல்படுகிறது என்று குற்றம் சாட்டினார்.
ஓபிஎஸ் டெல்லி பயணம் குறித்த கேள்விக்கு, "அது ரகசிய சந்திப்பு இல்லை. திமுக ஆட்சியை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும்" என்று பதிலளித்தார். திமுகவினர் "படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில்" என்ற ரீதியில் செயல்படுவதாக விமர்சித்த அவர், 2026 தேர்தலில் இந்துக்கள் ஒற்றுமையாக வாக்களிப்பார்கள் என்றும், தற்போது தங்கள் சுற்றுப்பயணத்திற்குக் கிடைக்கும் வரவேற்பு தேர்தல் வெற்றிக்கு வழிவகுக்கும் என்றும் நயினார் நாகேந்திரன் நம்பிக்கைத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிகாரிகள் அலட்சியம்: ₹3.25 கோடி இழப்பீட்டை வழங்க தாமதம்! மதுரை வட்டாச்சியர் அலுவலகப் பொருட்களை ஜப்தி செய்த நீதிமன்ற ஊழியர்கள்!