அஜித்குமார் வழக்கு.. வீடியோ எடுத்த நண்பருக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு..!
அஜித்குமார் வழக்கில் வீடியோ எடுத்த ஊழியருக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் ஜூன் 27ம் தேதி நகை காணாமல்போன வழக்கில் அஜித்குமார் என்ற இளைஞரை மானாமதுரை உட்கோட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று கடுமையாக தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார்.
தமிழ்நாட்டையே உலுக்கிய இந்த விவகாரத்தில் தனிப்படை போலீஸ்காரர்களான பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்து, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட எஸ்பியாக இருந்த ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் அஜித்குமார் வழக்கு.. டிஜிபிக்கு பறந்த நோட்டீஸ்.. மாநில மனித உரிமை ஆணையம் அதிரடி..!
விஷயம் பூதாகரமானதால் வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு, முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி, கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் நேற்று முன்தினம் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
இதனை தொடர்ந்து அஜித்குமாரின் தம்பிக்கு அரசுப் பணிக்கான நியமன ஆணை மற்றும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. இதற்கிடையே அஜித்குமாரை, சாதாரண உடையில் வந்த தனிப்படை போலீசார் அழைத்து சென்று விசாரணை என்ற பெயரில் அடித்து துன்புறத்திய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
தனிப்படை போலீசார் 2 நாட்களாக அஜித்குமாரை பல்வேறு இடங்களில் வைத்து தாக்கியதாகவும், தனிப்படையினருக்கு இந்த அதிகாரத்தை யார் கொடுத்தது என்றும் ஐகோர்ட் மதுரை கேள்வி எழுப்பி இருந்தது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் காவல்துறையில் உள்ள அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை கலைக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
அஜித் குமார் வழக்கின் முக்கிய சாட்சியான சத்தீஷ்வரன், ஐகோர்ட்டிலும் சாட்சி சொன்னதால் பாதுகாப்பு கேட்டு டிஜிபிக்கு ஆன்லைன் மூலம் மனு அனுப்பி உள்ளார். இந்நிலையில் வழக்கறிஞர் கணேஷ் குமாருடன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சத்தீஷ்வரன், “கடைசிவரை என்னை மாமா என அஜீத்குமார் அழைத்தார். நான் தைரியமாக வெளிவந்து சாட்சி சொன்ன உடன் தான் மற்ற சாட்சிகளும் வெளியே வந்தனர். எனக்கு பாதுகாப்பு வேண்டும், காவல் துறைக்கு எதிராக இருப்பததால் எல்லோரும் உண்மையை சொல்ல பயப்படுகிறார்கள். எனக்கு மறைமுகமாக மிரட்டல் விடுக்கப்படுகிறது. உயிரிழந்த அஜித்தின் குடும்பத்திற்கும் பாதுகாப்பு வேண்டும். நீதி கேட்டு வரும் கோவிலிலேயே இது போன்ற சம்பவம் மனதிற்கு வேதனையளிப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் எங்களுக்கென்று தனி பாதுகாப்பு கொடுக்க வேண்டும், அது சிவகங்கை மாவட்ட காவல்துறையாக இருக்கக் கூடாது, வெளி மாவட்ட காவல் துறையினர் மடப்புரம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும், எங்களுக்கு பாதுகாப்பு வழங்கி நீதி கிடைக்கவில்லை என்றால் நாங்கள் இதனை நீதிமன்றத்திற்கு மேல் முறையீட்டிருக்கு கொண்டு செல்வோம் என்றார்.
இந்த நிலையில், அஜித்குமாரின் நண்பர் சத்தீஸ்வரனுக்கு 24 மணி நேரம் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கடத்தப்பட்ட 13 வயது சிறுவன் கொலை.. முட்புதரில் கிடந்த சடலம்.. நடந்தது என்ன..?