மகா கும்பாபிஷேகத்திற்கு தயாராகும் திருச்செந்தூர்.. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஏடிஜிபி ஆய்வு..!
கும்பாபிஷே விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஏ.டி.ஜி.பி. நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த 2009ம் ஆண்டு ஜூலை 2ம் தேதி அன்று கும்பாபிஷேக விழா நடந்தது. அதன் பின் சுமார் 16 ஆண்டுகளுக்கு பிறகு, வரும் ஜூலை மாதம் 7ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இதனையொட்டி எச்.சி.எல். நிறுவனம் சார்பில் ரூ.200 கோடி, அறநிலையத்துறை சார்பில் ரூ.100 கோடி என மொத்தம் ரூ.300 கோடி மதிப்பில் பெருந்திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
சுமார் 137 அடி உயரமும், 9 நிலைகளையும் கொண்ட ராஜகோபுரம் புதுப்பிக்கபட்டன. ராஜகோபுரத்தில் தலா 7¾ அடி உயரமுள்ள செம்பாலான 11 அடுக்குகள் கொண்ட 9 கலசங்களும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு பழமைமாறாமல் புதுப்பிக்கப்பட்டது. பின்னர் அவற்றில் வரகு நிரப்பப்பட்டு ராஜகோபுரத்தின் உச்சியில் மீண்டும் பொருத்தப்பட்டது.
இதையும் படிங்க: 'தமிழிலும்' குடமுழுக்கு என்பது அவமானம்..! திமுக அரசுக்கு எதிராக கொந்தளித்த சீமான்..!
பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், வரும் ஜூலை 7ஆம் தேதி மகா கும்பாபிஷேக குடமுழுக்கு நடைபெறுகிறது. இதனை ஒட்டி கடந்த மே 18ம் தேதி காலை ராஜகோபுரம் முன் பகுதியில் முகூர்த்த பந்தக்கால் நடும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.
மேலும் ஜூலை 7 ஆம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவிலில் யாகசாலை பூஜை வரும் ஜூலை 1ல் தொடங்க உள்ளது. குடமுழுக்கு விழாவுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், திருச்செந்தூர் முருகன் கோயிலில் குடமுழுக்கு தமிழில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் வேதபாராயணம், திருமுறை விண்ணப்பம் மற்றும் நாதசுர இன்னிசை ஆகியவை நடைபெறும் எனவும், பன்னிரு திருமுறைகள் திருப்புகழ் மற்றும் கந்தர் அனுபூதி முதலான செந்தமிழ் வேதங்கள் முற்றோதல் நிகழ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கும்பாபிஷே விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவ ஆசிர்வாதம் நேரில் ஆய்வு மேற்கொண்டார். கும்பாபிஷேக விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதனையொட்டி திருச்செந்தூர் கோவிலுக்கு வருகை தந்த ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவஆசிர்வாதம், கோவிலில் உள்ள விமான தளம், யாக சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தார். இதனையடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தினார்.
இதையும் படிங்க: செந்தில்நாதனுக்கு செந்தமிழில் குடமுழுக்கு.. கோவில் நிர்வாகம் சொன்ன சூப்பர் அறிவிப்பு..!