×
 

மின்துறை தனியார்மயத்தை கைவிடுக! திருப்பூரில் மின் ஊழியர் மத்திய அமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம்!

மின்துறை தனியார்மயக் கொள்கையைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், ஸ்மார்ட் மீட்டர் கேபெக்ஸ் முறையை அமல்படுத்தக் கோரியும் திருப்பூரில் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் எரிசக்தித் துறை மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட தனியார்மயக் கொள்கைகளை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தி, திருப்பூர் மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பாகத் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் இன்று அனல் பறக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மின்சார விநியோகம் மற்றும் மின் உற்பத்தித் துறையில் தனியார் கூட்டமைப்பின் தலையீட்டை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும், உயர் அழுத்த மின் வழித்தடங்களைத் தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவைக் கைவிட வேண்டும், மின்சாரத் துறையைப் பொதுத்துறையாகவே தொடர்ந்து பாதுகாத்துப் பராமரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்து மின் ஊழியர்கள் திரண்டனர். மேலும், சர்ச்சைக்குரிய ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தில் டோட்டெக்ஸ் முறையைக் கைவிட்டு, கேபெக்ஸ் முதலீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் எனவும் முழக்கங்களை எழுப்பினர்.

குறிப்பாக, கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மின்வாரியத்தில் மிகக் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் 10,000 ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு நேரடியாக நாள் ஒன்றுக்கு ரூ.786 ஊதியம் வழங்கிப் பணிப் பாதுகாப்பு அளிக்காமல், புதிதாக ஒப்பந்த அடிப்படையில் மேலும் 10,000 பேரை நியமிக்கும் அரசின் அறிவிப்பைக் கண்டித்து ஆவேச முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இத்துடன் மின்வாரியத்தின் அனைத்துப் பிரிவு அலுவலகங்களுக்கும் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளப் பகுதி நேரப் பணியாளர்களைத் தகுந்த ஊதியத்துடன் உடனடியாக நியமிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இதையும் படிங்க: ஒரே வார்த்தை... போராட்டம் வாபஸ்! கரப்பான் பூச்சி கட்சியின் முடிவுக்கு பின்னால் என்ன?

திருப்பூர் மாவட்ட மின் ஊழியர் மத்திய அமைப்பின் நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்ற இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட மின்வாரியப் பணியாளர்கள் மற்றும் தொழிற்சங்கத் தோழர்கள் கலந்துகொண்டு தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். தமிழக அரசு மின்சாரத் துறையைத் தனியார் மயமாக்கும் போக்கைக் கைவிடாவிட்டால், மாநிலம் தழுவிய அளவில் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதையும் படிங்க: பணி நிரந்தரம் கோரி 12-வது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டம்! முதல்வருக்கு உருக்கமான வேண்டுகோள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share