2026 தமிழக தேர்தல்: சென்னையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு!
சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலர் ஜெ. குமரகுருபரன் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முன்னிலையில் கணினி குலுக்கல் முறையில் EVM மற்றும் VVPAT கருவிகள் தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்டன.
தமிழகச் சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-க்கான ஆயத்தப் பணிகளில் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை (EVM) ஒதுக்கீடு செய்யும் முதற்கட்டப் பணிகள் இன்று நடைபெற்றன. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, ஏற்கனவே முதல்நிலை சரிபார்த்தல் (FLC) செய்யப்பட்ட EVM மற்றும் VVPAT கருவிகள், கணினி குலுக்கல் முறையில் (Randomisation) சுழற்சிக்கு உட்படுத்தப்பட்டன. இந்த முறையின் மூலம் எந்தத் தொகுதிக்கு எந்த இயந்திரம் செல்லும் என்பது தன்னிச்சையாகத் தீர்மானிக்கப்படுகிறது.
சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. குமரகுருபரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் நேரில் கலந்துகொண்டு மேற்பார்வையிட்டனர்.அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், மாவட்டச் செயலாளர் பாலகங்கா. பாஜக சார்பில் மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன். இதர கட்சிகள் சார்பில் திமுக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள்.
இந்த ஒதுக்கீடு குறித்துப் பேசிய மாவட்ட தேர்தல் அலுவலர், வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீட்டில் முழுமையான வெளிப்படைத்தன்மையைப் பேணவே அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் இந்தக் கணினி குலுக்கல் நடத்தப்படுகிறது. இதன் மூலம் எந்தவிதமான முறைகேடுகளுக்கும் இடமில்லாமல் சீரான முறையில் கருவிகள் ஒதுக்கப்படுகின்றன, என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: இரு திராவிட கட்சிகளுக்கும் ஒரே மாற்று நாம் தமிழர்! திருத்தணியில் சீமான் அதிரடி பேச்சு!
ஒதுக்கீடு செய்யப்பட்ட இந்த இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் அந்தந்தச் சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள பாதுகாப்பு அறைகளுக்கு (Strong Rooms) கொண்டு செல்லப்பட உள்ளன. அங்கு 24 மணி நேரத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு மற்றும் சிசிடிவி கண்காணிப்பு உறுதி செய்யப்படும்.
இதையும் படிங்க: இதுவரை ₹151.93 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல்! தேர்தல் ஆணையம் அறிக்கை!