நீட் தேர்வு முடிவுகள் எதிரொலி மனநல ஆலோசனை எண்கள் அறிவிப்பு! தமிழக அரசின் 'நட்புடன் உங்களோடு' திட்டம்!
2026-27 கல்வியாண்டிற்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, மாணவர்களின் மனநலனைக் காக்கத் தமிழ்நாடு அரசு 14416 மற்றும் 104 ஆகிய கட்டணமில்லா உதவி எண்களை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 2026-27 கல்வியாண்டிற்கான நீட் தேர்வு (NEET Exam Results) முடிவுகள் நேற்று (ஜூலை 16, 2026) வெளியாகியுள்ளன. தேர்வு முடிவுகளுக்குப் பிந்தைய பதற்றம் மற்றும் மன அழுத்தத்தில் இருந்து மாணவர்களைப் பாதுகாக்கவும், அவர்களுக்குத் தகுந்த வழிகாட்டுதல்களை வழங்கவும் தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
மாணவர்களின் மன உறுதி மற்றும் மனநலனைக் காக்கும் வகையில், தமிழ்நாடு அரசின் "நட்புடன் உங்களோடு" திட்டத்தின் கீழ் 24 மணி நேரமும் செயல்படும் பிரத்யேக தொலைபேசி வழியிலான மனநல ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. நீட் தேர்வு முடிவுகளால் எவ்வித மன உளைச்சலுக்கோ அல்லது தவிப்பிற்கோ ஆளாகும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் தயக்கமின்றிப் பின்வரும் எண்களைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது:
இதையும் படிங்க: வீரியமெடுக்கும் காவிரி நீர் பிரச்சனை..! பாத்துட்டு சும்மா இருக்காதீங்க... செல்வப் பெருந்தகை எச்சரிக்கை..!
📞 14416 (கட்டணமில்லா எண்)
📞 104 (மாநில சுகாதார உதவி எண்)
இச்சேவை குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அரசுச் செயலாளர் தாரேஸ் அகமது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தக் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளும் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் முறையான மற்றும் தகுதிவாய்ந்த மனநல மருத்துவர்கள் (Psychiatrists) மற்றும் மனநல ஆலோசகர்கள் (Counselors) மூலம் பிரத்யேக ஆலோசனைகளும் மனநல ஆதரவும் வழங்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
தேர்வு முடிவுகள் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டுமே என்பதால், மாணவர்கள் எவ்வித தவறான முடிவுகளையும் எடுக்காமல், தங்களின் எதிர்காலப் பாதையைத் திட்டமிட இந்தத் துரித ஆலோசனைகளைப் பயன்படுத்துமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இதையும் படிங்க: 100 நாள் வேலை திட்டத்திற்கு பதிலாக 'விபி ஜி ராம் ஜி' புதிய திட்டம்!: நாளை முதல் தமிழகத்தில் அமல்!