பெண் அரசு ஊழியர்களுக்கு 3-வது குழந்தைக்கும் 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு! தமிழக அரசு அரசாணை வெளியீடு!
பெண் அரசு ஊழியர்கள் 3-வது குழந்தை பெற்றெடுத்தால் 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கும் அரசாணையைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியில் உள்ள பெண் ஊழியர்கள் உயிருடன் உள்ள தங்களது 3-வது குழந்தை வரை பெற்றுக்கொண்டால் முழு ஊதியத்துடன் கூடிய 365 நாட்கள் (12 மாதங்கள்) மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என்றும், 3-வது குழந்தைக்கு மேல் பெற்றுக்கொண்டால் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப 12 வாரங்கள் வரை மகப்பேறு விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்றும் மனிதவள மேலாண்மைத் துறை அதிரடி அரசாணையை வெளியிட்டுள்ளது.
கடந்த 2021-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசாணையின்படி, உயிருடன் உள்ள இரண்டு குழந்தைகளைக் கொண்ட திருமணமான பெண் அரசு ஊழியர்களுக்கு முழு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு 270 நாட்களில் இருந்து 365 நாட்களாக உயர்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 2026 மார்ச் மாதம் வெளியான அரசாணையில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட பெண் ஊழியர்களுக்கு 12 வாரங்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், 2026-2027-ஆம் ஆண்டிற்கான மனிதவள மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கையின் போது சட்டமன்றத்தில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில் தற்போது இந்த புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பெண் அரசு ஊழியர்கள் தங்களது மூன்றாவது குழந்தைக்கும் முழு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பைப் பெறுவதற்கான கால அவகாசம் 12 வாரங்களில் இருந்து 365 நாட்களாக அதிகாரப்பூர்வமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், இந்த விடுப்புக் காலத்தைப் பிரசவத்திற்கு முந்தைய ஓய்வு மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய பராமரிப்புக் காலம் எனத் தங்களுக்கு வசதியான முறையில் பிரித்துப் பயன்படுத்திக் கொள்ளும் சலுகையும் பெண் ஊழியர்களின் விருப்பத்திற்கே வழங்கப்பட்டுள்ளது. 3-வது குழந்தைக்கு மேல் பெற்றெடுக்கும் பெண் ஊழியர்கள் 12 வாரங்கள் வரை மகப்பேறு விடுப்பைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கௌரவ விரிவுரையாளர்களுக்கு 12 மாத ஊதியம் வழங்குக.... இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவு 2026 ஆகஸ்ட் 25-ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு உடனடியாக அமலுக்கு வருகிறது. மேலும், ஆகஸ்ட் 25-ஆம் தேதிக்கு முன்னதாகவே 3-வது குழந்தைக்காக 12 வார மகப்பேறு விடுப்பில் சென்றிருந்து, அத்தேதியிலோ அல்லது அதற்குப் பின்னரோ தொடர்ந்து விடுப்பில் உள்ள பெண் அரசு ஊழியர்களும் மொத்தம் 365 நாட்கள் வரையிலான முழு மகப்பேறு விடுப்பைப் பெறத் தகுதியுடையவர்கள் என அரசாணையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. பெண் அரசு ஊழியர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஏக்கருக்கு ₹30,000 இழப்பீடு கொடுங்க! மழையால் தவிக்கும் விவசாயிகளுக்காக பொங்கி எழுந்த இபிஎஸ்!