முதல் பட்ஜெட்டுடன் களமிறங்கும் தவெக அரசு..!! வெளியாகுமா புதிய அறிவிப்புகள்? எதிர்பார்ப்பில் தமிழகம்..!!
இதனால் இந்தக் கூட்டத்தொடர் செப்டம்பர் இரண்டாம் வாரத்துக்குள் நீடிக்க வாய்ப்புள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நாளை முதல்முறையாக தமிழக வெற்றிக் கழக அரசின் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் இடைக்கால நிதிநிலை அறிக்கை மட்டுமே தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், 17-வது சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த தவெக அரசு, தனது முதல் வருடாந்திர பட்ஜெட்டை இன்று முன்வைக்கிறது. இதற்கான அறிவிப்பை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கடந்த மாதம் 21-ஆம் தேதி வெளியிட்டிருந்தார்.
நாளை காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடும்போது, நிதி அமைச்சர் மரிய வில்சன் 2026-27 ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வார். அடுத்த நாள் வியாழக்கிழமை வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் சமர்ப்பிக்க உள்ளார். பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெறும். அதில் கூட்டத்தொடரின் கால அளவு உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.
பட்ஜெட் மீதான உறுப்பினர்களின் விவாதங்கள் ஆகஸ்ட் 10-ஆம் தேதி தொடங்கும். விவாதங்கள் முடிவடைந்த பிறகு நிதி அமைச்சர் பதிலளித்துப் பேசுவார். தொடர்ந்து அரசுத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு விவாதத்திற்கு விடப்படும். இதனால் இந்தக் கூட்டத்தொடர் செப்டம்பர் இரண்டாம் வாரத்துக்குள் நீடிக்க வாய்ப்புள்ளது. முதல்வராக விஜய் தலைமையிலான இந்த அரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் என்பதால், அனைத்துத் துறை அமைச்சர்கள், செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் துறைவாரியாக முதல்வர் விஜய் விரிவான ஆலோசனைகள் நடத்தியுள்ளார்.
இதையும் படிங்க: நீட், EWS எதிர்ப்பைக் கண்டு மிரளும் தவெக அரசு! பெரியார் திடலில் போலீஸ் குவிப்பிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற முக்கிய வாக்குறுதிகளான குடும்பத் தலைவிகளுக்கு 60 வயது வரை மாதம் ரூ.2,500 வழங்கும் மகளிர் திட்டம், ஆண்டுக்கு ஆறு இலவச எரிவாயு சிலிண்டர்கள், வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை, அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் போன்றவை இந்தப் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே தீவிரமாக உள்ளது.
அதே நேரத்தில் காவிரி நதிநீர் பங்கீடு, மேகதாது அணை, மின்வெட்டு, அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. இதனால் கூட்டத்தொடர் முழுவதும் தீவிர விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முக்கிய சட்டத்திருத்த மசோதாக்கள், அரசுத் தீர்மானங்கள் மற்றும் அவை விதி 110-ன் கீழ் முதல்வரின் அறிவிப்புகளும் இந்தத் தொடரில் வர வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: போராடும் தொழிலாளர்களை அடித்து விரட்டுவதா? தவெக அரசுக்கு சீமான் கண்டனம்!