தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை.. 12 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை..!
வளிமண்டலக் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாகத் தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய பரவலான மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இருந்து மத்திய வங்கக்கடல் பகுதிகள் வரை, லட்சத்தீவு, வடக்கு கேரளம், தெற்கு உள் கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம் வழியாக வளிமண்டலக் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை ஒன்று நிலவுகிறது. இதன் எதிரொலியாகத் தமிழ்நாட்டில் அடுத்த ஏழு நாட்களுக்குப் பரவலாக மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த வளிமண்டலக் காற்றழுத்தத் தாழ்வுப் பாதையின் காரணமாக, இன்றும் நாளையும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, ஈரோடு மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது. இதனைத் தொடர்ந்து, வரும் மே 22-ஆம் தேதி சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருச்சி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை கொட்டித்தீர்க்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க: கூட்டணி ஆட்சி அமைக்கிறார் முதல்வர் விஜய்.. நாளை காலை 10 மணிக்குத் தமிழக அமைச்சரவை விரிவாக்கம்!
அதன் பின்னர், மே 23-ஆம் தேதி முதல் மே 26-ஆம் தேதி வரையிலான நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்வதற்குக் கூடுதல் வாய்ப்புகள் நிலவுகின்றன. தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தனது தினசரி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க: அமைச்சரவை விரிவாக்க விழா: சிபிஐ கட்சிக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தார் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார்!