வாக்குச்சாவடிகளில் கண் கொத்தி பாம்பாக இருங்கள்! 234 தொகுதி வேட்பாளர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கட்டளை!
மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் 234 தொகுதி வேட்பாளர்களிடம் ஆலோசனை நடத்தி தொகுதி நிலவரம் குறித்தும் கேட்டறிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நாளை (ஏப்ரல் 23) ஒரே கட்டமாக நடைபெறவுள்ள நிலையில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் 234 தொகுதி வேட்பாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இறுதி கட்ட ஆலோசனை நடத்தினார். அண்ணா அறிவாலயத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தேர்தல் நாளில் மேற்கொள்ள வேண்டிய வியூகங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கவுள்ள நிலையில், வாக்குச்சாவடி முகவர்கள் (Polling Agents) கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து முதலமைச்சர் விளக்கினார். வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் விவிபேட் (VVPAT) கருவிகளின் சீல் வைக்கப்படுவதை முறையாகக் கண்காணிக்க வேண்டும். வாக்குப்பதிவு முடிந்து இயந்திரங்கள் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்படும் வரை முகவர்கள் வாக்குச்சாவடியை விட்டு நகரக்கூடாது என அறிவுறுத்தினார்.
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை எக்காரணம் கொண்டும் மீறக்கூடாது என்றும், அதே சமயம் வேட்பாளர்களுக்குச் சட்டப்படி வழங்கப்பட்டுள்ள உரிமைகளை விட்டுக்கொடுக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். முறைகேடுகள் ஏதேனும் கண்டறியப்பட்டால், உடனடியாகத் தேர்தல் அதிகாரிகளிடம் ஆதாரங்களுடன் புகார் அளிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026: வாக்குப்பதிவுக்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விவரங்கள்..!!
கூட்டணியில் உள்ள 234 தொகுதிகளின் தற்போதைய நிலவரம் குறித்து ஒவ்வொரு வேட்பாளரிடமும் முதலமைச்சர் தனித்தனியாகக் கேட்டறிந்தார். தேர்தல் பரப்புரையின் போது கிடைத்த வரவேற்பு மற்றும் தொகுதியில் நிலவும் சாதகமான அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தேர்தல் நாளில் வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவது மற்றும் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிப்பது குறித்து மாவட்டச் செயலாளர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
கூட்டத்தின் இறுதியில் பேசிய முதலமைச்சர், கடந்த கால சாதனைகளையும், எதிர்காலத் திட்டங்களையும் மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளோம். நாளை நடைபெறும் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மகத்தான வெற்றி பெறுவது உறுதி. ஜனநாயகக் கடமையை ஆற்றும் பணியில் தொய்வின்றி உழையுங்கள் என உற்சாகப்படுத்தினார்.
இந்தக் கூட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் முக்கிய முன்னணியினர் கலந்து கொண்டனர். வாக்குப்பதிவிற்குச் சில மணி நேரங்களே உள்ள நிலையில், முதலமைச்சரின் இந்த நேரடி ஆலோசனை கூட்டணித் தொண்டர்கள் மத்தியில் பெரும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு! தேர்தல் நாளில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த விஜய் கடிதம்!