தொழில்நுட்பத்துடன் பாரம்பரியம் இணைய வேண்டும்! சென்னையில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் பேச்சு!
நவீன தொழில்நுட்பத்துடன் நமது பாரம்பரியமும் இணைய வேண்டும் எனச் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற சர்வதேசப் பொறியியல் கண்காட்சியில் ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மைய வளாகத்தில் (Chennai Trade Centre) நடைபெற்ற ‘IMECE INDIA 2026’ சர்வதேசப் பொறியியல் கண்காட்சி மற்றும் கருத்தரங்கினைத் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் முறைப்படி தொடங்கி வைத்தார். நாட்டின் முன்னணிப் பொறியியல் நிறுவனங்களின் பிரதிநிதிகள், சர்வதேசத் தொழில் வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் துறை சார்ந்த வல்லுநர்கள் பெருமளவில் பங்கேற்ற இக்கண்காட்சியைத் திறந்து வைத்துப் பார்வையிட்ட பின்னர் அவர் சிறப்புரையாற்றினார்.
அரங்கில் கூடியிருந்த வல்லுநர்கள் மத்தியில் உரையாற்றிய ஆளுநர், எனக்குப் பொறியியல் துறையில் நேரடி அனுபவம் இல்லாவிட்டாலும் கூட, நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் இத்தகைய அதிநவீன தொழில்நுட்பக் கருத்தரங்கில் பங்கேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். தொழில் மேலாண்மை மற்றும் நிறுவன நிர்வாகக் கூறுகள் என்பவை ஏதோ நவீன மேற்கத்தியக் கண்டுபிடிப்புகள் மட்டுமல்ல; சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்ட நமது இதிகாசமான மகாபாரதத்தின் உத்யோக பருவம் என்ற பகுதியிலேயே தொழில்களை எவ்வாறு திறம்பட நடத்துவது, சவால்களை எவ்வாறு நிர்வாகம் செய்வது என்பது குறித்த தொலைநோக்குப் பாடங்கள் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன என்று சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: "தாய்மாமன் காது கொடுத்து திட்டம்"..! வாக்குறுதி என்னாச்சு..? பேரவையில் உதயநிதி சரமாரி கேள்வி..!!
தொடர்ந்து தொழில்நுட்பத்தின் நிலைத்தன்மை குறித்துப் பேசிய அவர், நமது பாரம்பர்ய நெறிமுறைகளும் அதிநவீனத் தொழில்நுட்பமும் ஒருங்கிணைந்து பயணிக்க வேண்டும். நாம் வகுக்கும் வளர்ச்சி இலக்குகளும், உருவாக்கும் தொழில்நுட்பங்களும் எதிர்காலத் தலைமுறைக்கு உகந்த நீண்டகால நிலைத்தன்மை கொண்டவையாக இருக்க வேண்டும்.
நாம் அரசியல்வாதியாகவோ, ஐ.ஏ.எஸ் அல்லது ஐ.பி.எஸ் போன்ற உயர் அதிகாரிகளாகவோ, மருத்துவர்களாகவோ அல்லது எந்தத் துறையில் பணிபுரிபவர்களாக இருந்தாலும், எல்லைகளைக் கடந்து சக மனிதர்களிடம் மனிதாபிமானத்தோடும் மனிதத்தன்மையோடும் பரிவோடு செயல்படுவதே தலையாய கடமையாகும் என்று ஆணித்தரமாகத் தெரிவித்தார். நவீனப் பொறியியல் நுணுக்கங்கள் மற்றும் புதுமைப் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்ட இக்கண்காட்சி பார்வையாளர்களைப் பெரிதும் ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: பள்ளிக்குள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பலே பாதிரியார்... கையும் களவுமாக சிக்கியதும் பதறியடித்து ஓட்டம்...!