×
 

ஆளுங்கட்சியின் அதிகார துஷ்பிரயோகம்... இப்பவே கிள்ளி எறியுங்க விஜய்..! TTV காட்டம்..!!

ஆளுங்கட்சியினர் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக டிடிவி தினகரன் குற்றம் சாட்டினார்.

அரசு அலுவலகங்களிலும் மருத்துவமனைகளிலும் ஆய்வு எனும் பெயரில் அத்துமீறும் தவெகவினர் மக்கள் நலனுக்காக இயங்கும் துறைகளில் ஆளும் கட்சியினரின் அதிகார துஷ்பிரயோகம் கடும் கண்டனத்திற்குரியது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டத்தில் தவெக மருத்துவரணி எனும் பெயரில் சிலர் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ஆய்வு நடத்தியதாகவும், தவெக மாவட்டச் செயலாளர் எனும் பெயரில் சிலர் அம்மா உணவகங்களில் ஆய்வு செய்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருப்பதாக சுட்டிக்காட்டினார்.

ஆளுங்கட்சி என்ற மமதையில் தவெகவினர் சிலர் அரசு அலுவலகங்களில் திடீர் ஆய்வு நடத்தி அதிகாரிகளுக்கு உத்தரவு போடுவதும், அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதும் கடும் கண்டனத்திற்குரியது என்றார். அரசு அலுவலகங்களில் முறையான ஆய்வுகளை மேற்கொள்வதற்கும், நடவடிக்கை எடுப்பதற்கும் அரசின் நிர்வாக அமைப்பு இருக்கும்போது ஆளும் கட்சியின் உறுப்பினர்களுக்கு இந்த அதிகாரத்தை வழங்கியது யார் என கேள்வி எழுப்பினார்.

முதலமைச்சரின் பதவி ஏற்பு விழாவில் "யார் தவறு செய்தாலும் அவர்கள் என்னோடு இருப்பவர்களாக இருந்தாலும் அவர்களை விடவே மாட்டேன்" என்று சூளுரைத்த முதலமைச்சர் ஜோசப் விஜய், அரசு அலுவலகங்களில் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட தனது கட்சிக்காரர்களின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேட்டுள்ளார். மேலும் ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு அலுவலகங்களும், பொதுமக்கள் கூடும் இடங்களும் படப்பிடிப்புத் தளங்களாகவே மாறி வருவதாகப் பொதுமக்களே குற்றம் சாட்டுகின்றனர் என்றும் கூறினார்.

இதையும் படிங்க: டிடிவி தினகரன் தலையில் இறங்கியது இடி... ஒரே நேரத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கல்தா... காமராஜ் செய்த சதியா?

ஆளும் கட்சியினர் மற்றும் ரசிகர்கள் என்ற போர்வையில் முதலமைச்சர் அறையில் நடக்கும் விவாதங்களும், முதலமைச்சரின் புகழ் பாடுவதற்காகப் பொதுமக்களுக்கு இடையூறு செய்து Insta Reels களாக எடுத்து வெளியிடுவதே தவெக அரசின் சாதனையாகவும் டிரெண்டாகவும் மாறியுள்ளது எனவும் குறிப்பிட்டார். எனவே, விளம்பரம் என்பது வேறு மக்கள் பணி என்பது வேறு என்பதை முதலமைச்சரும் தவெக தலைவருமான ஜோசப் விஜய், தனது கட்சி தொண்டர்களுக்கு உணர்திடுவதொடு, அரசு அலுவலகங்களிலும், பொது இடங்களிலும் தவெகவினரின் அதிகார துஷ்பிரயோகத்தை முளையிலேயே கிள்ளி எறியும் வகையில் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். 

இதையும் படிங்க: "கட்சியிலிருந்து நீக்கம்"..! பத்து வருஷ உழைப்புக்கு கிடைச்ச பரிசு..! MLA காமராஜ் ஆதங்கம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share