×
 

#BREAKING இறந்தவர்கள் பெயரில் 7 ஆண்டுகளாக நடந்த மெகா மோசடி... தூத்துக்குடி துறைமுகத்தில் நடந்த பகீர் சம்பவம்...!

தூத்துக்குடி துறைமுக அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் இந்தியாவின் 13 முக்கிய துறைமுகங்களில் ஒன்றாகும். 1974 ஆம் ஆண்டு இது முக்கிய துறைமுகமாக அறிவிக்கப்பட்டது. இத்துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான மத்திய அரசு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பணியில் இருந்தபோது உயிரிழந்தவர்கள் மற்றும் ஓய்வுபெற்ற பணியாளர்களின் குடும்பத்தினருக்கு ஓய்வூதியத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பணியில் இருந்தபோது உயிரிழந்த பணியாளர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியத் தொகையை சில அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மோசடியாக பெற்றதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக, இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் செயல்முறையில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக தகவல்கள் வெளியாகின.

விசாரணையில், இறந்த பணியாளர்களின் குடும்பத்தினரின் ஆதார் எண்கள் மற்றும் வங்கி கணக்கு விவரங்களை போலியாக உருவாக்கி, கடந்த ஏழு ஆண்டுகளாக ஓய்வூதியத் தொகையை மோசடியாக பெற்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: தூத்துக்குடிக்கு கண்டெய்னரில் வந்தியிறங்கிய 5 டன் கசகசா... விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்... பின்னணியில் யார்?

அதில், மொத்தம் 27 இறந்த பணியாளர்களின் வாரிசுகளாக போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, அவர்களுக்குச் செல்ல வேண்டிய ஓய்வூதியத் தொகை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு தெரிந்த நபர்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டதாக கண்டறியப்பட்டது.

இந்த வழக்கில் துறைமுக முதுநிலை அதிகாரி அனுராதா, கணக்கு அதிகாரி பழனி குமாரசாமி, டேட்டா ப்ராசசிங் அதிகாரி ஜோசப் துரைராஜ், கணினி உதவி பொறியாளர் மற்றும் உதவி இயக்குநர் காளியப்பன் உள்ளிட்ட அதிகாரிகளும், ஊழியர்களான சந்தானசங்கர், மணிகண்ட பிரபு, கிஷோர் பாபு உள்ளிட்டோர் என மொத்தம் ஏழு பேர் தொடர்புடையவர்கள் என கூறப்படுகிறது.

இவர்கள் 2017 முதல் 2024 வரை 27 குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியத் தொகையை முறைகேடாக பெற்றதாகவும், இதன் மூலம் சுமார் 4 கோடியே 51 லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாகவும் சிபிஐ கண்டறிந்துள்ளது.

இதையடுத்து, போலி ஆவணங்கள் தயாரித்தல், அரசுப் பணத்தை கையாடல் செய்தல் உள்ளிட்ட 21 பிரிவுகளின் கீழ் ஏழு பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. மதுரை சிபிஐ அலுவலகத்தின் தலைமை அதிகாரி சந்தோஷ்குமார் தலைமையில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

துறைமுகத்தில் பணியாற்றி உயிரிழந்த பணியாளர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட வேண்டிய தொகையை அதிகாரிகளே மோசடியாக அபகரித்த சம்பவம், அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஏழு ஆண்டுகளாக நடைபெற்றதாகக் கூறப்படும் இந்த மோசடி தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், வழக்கின் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: பெட்ரோல் பங்கை சுறையாடிய போதை ஆசாமிகள்! எரிபொருள் நிரப்பும் இடத்தில் சிறுநீர் கழித்ததை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share