3 சேனல்கள் முடக்க விவகாரத்தில் அரசுக்கு தொடர்பா? - படு ஓபனாக விளக்கமளித்த அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார்...!
இந்த விவகாரத்தில் அரசுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. இது அங்கிருந்த தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக ஏற்பட்டுள்ளது
தவெக அரசை விமர்சனம் செய்ததற்காக 3 செய்தி சேனல்களின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், அமைச்சர் நிர்மல் குமார் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
மின் வெட்டு மற்றும் தவெக அரசை விமர்சனம் செய்ததற்காக பாலிமர், தமிழ் ஜனம், மற்றும் நியூஸ் தமிழ் ஆகிய 3 செய்தி சேனல்களின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன. இதற்கு உதயநிதி, இபிஎஸ், நயினார் நாகேந்திரன், சீமான் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், 3 செய்தி சேனல்களின் ஒளிபரப்பு தடை பட்டுள்ளதற்கான காரணத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தனது எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள பதிவில்; '3 சேனல்கள் நீக்கப்பட்டுள்ளன என்ற செய்தி தவறானது. சம்மந்தப்பட்ட 3 சேனல்களை தொழில்நுட்ப பிரச்னைகள் காரணத்தால் தற்காலிகமாக சில செட் ஆப் பாக்ஸ்களில் மட்டும் ஒளிபரப்பு செய்ய இயலவில்லை.இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி சேனல்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைச் சரி செய்வதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனம் மூலமாக முழுவீச்சில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனக்குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: “டமால் டுமீல்...” வீடுகளில் திடீரென வெடித்த 20 டி.வி., 10 பிரிட்ஜ்கள்.. அதிர்ச்சியில் உறைந்த மக்கள்... நடந்தது என்ன?
மேலும் செய்தியாளர்கள் சந்திப்பில் கூட, “அரசு கேபிள்களில் இருந்து மூன்று சேனல்கள் தெரியவில்லை என்பது முழுக்க முழுக்க தொழில்நுட்ப பிரச்சனை தான். நான் சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி விட்டேன், விரைவில் இந்த பிரச்சனை சரி செய்யப்படும். சன் டிவி, ஜெயா டிவி போன்ற எங்களை அதிகமாக விமர்சனம் செய்யும் சேனல்கள் எல்லாம் தெரிகிறது, இந்த மூன்று சேனல்கள் மட்டும் தெரியவில்லை என விமர்சனம் வைப்பது தவறான ஒன்று” என விளக்கமளித்தார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமாரின் செய்தியாளர் சந்திப்பின் போதும் இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்விகளை முன்வைத்தனர். அதற்கு அவர், “இந்த விவகாரத்தில் அரசுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. இது அங்கிருந்த தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அரசு நிர்வாகத்திற்கோ, அரசு சார்ந்த அமைச்சகங்களுக்கோ இதில் எந்த விதமான தொடர்பும் இல்லை. கடந்த மூன்று நாட்களாக யார் தவறு செய்தார்கள், ஏன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பதைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இது சில தனிநபர்களின் தொழில்நுட்பப் பிழை காரணமாக நிகழ்ந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதனை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
சம்பந்தப்பட்ட நிறுவனங்களையும், ஒளிபரப்பு நிறுவனங்களையும் அழைத்து இந்த விவரங்களைத் தெரிவித்துள்ளோம். இந்த தவறுக்கு யார் காரணம் என்பதை கண்டறிந்து, தொடர்புடைய நபர்களிடமும் விளக்கம் கேட்டு வருகிறோம். அரசு கேபிள் சேவையின் சில பகுதிகள் தற்போது மூன்றாம் தரப்பு ஒப்பந்ததாரர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. அந்த ஒப்பந்தப் பகுதிகளில்தான் சில தவறுகள் நடைபெற்றுள்ளன. அவற்றைச் சரிசெய்யும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.
பல இடங்களில் பயனர் பெயர் , கடவுச்சொல் உள்ளிட்ட அணுகல் விவரங்கள் இன்னும் அந்த ஒப்பந்ததாரர்களிடமே இருப்பதால், அவற்றை மீட்டெடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்” என்றார்.
இதையும் படிங்க: மீண்டும் வெடித்தது போர்... ஈரான் மீது குண்டு மழை பொழிந்த அமெரிக்கா... செம்ம ஷாக்கில் உலக நாடுகள்...!