யாருமின்றி தனியாக மும்பை சென்ற விஜய்! ரகசிய திட்டமா? குடும்ப விழாவா? சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் இன்று இரவு 7.24 மணிக்குச் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் மும்பை புறப்பட்டுச் சென்றார்.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் இன்று இரவு சென்னையில் இருந்து திடீரென தனி விமானத்தில் மும்பைக்குப் புறப்பட்டுச் சென்றது அரசியல் மற்றும் திரைத்துறையினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று மாலை 5 மணியளவில் நடிகர் விஜய் மும்பை செல்லவிருப்பதாகத் தகவல் பரவியது. இது குறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, பழைய விமான நிலையத்தின் 6-வது கேட் வழியாக உள்ளே நுழைந்து, இரவு 7 மணிக்குத் தனி விமானத்தில் செல்வதற்கான முறையான அனுமதி (BCAS Pass) பெறப்பட்டதை அவர்கள் உறுதிப்படுத்தினர்.
திட்டமிட்டபடி இரவு 7.10 மணிக்குச் சென்னை பழைய விமான நிலையத்திற்குத் தனது காரில் வந்திறங்கிய விஜய், பாதுகாப்புச் சோதனைகளை முடித்துக் கொண்டு தனி விமானத்தில் ஏறினார். சரியாக இரவு 7.24 மணிக்கு அந்த விமானம் மும்பை நோக்கிப் புறப்பட்டது. வழக்கமாக விஜய்யுடன் பயணிக்கும் தவெக நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் உள்ளிட்டோர் இம்முறை அவருடன் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "விஜய்க்கு மூளை வளர்ச்சி இல்லை": ரஜினியை விமரிசித்த ஆதவ் அர்ஜுனாவிற்கு மதுரை ரசிகர்கள் கண்டனம்!
விஜய்யின் இந்தத் திடீர் பயணத்திற்குப் பின்னால் இரண்டு முக்கியக் காரணங்கள் கூறப்படுகின்றன. அவர் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தின் தணிக்கைச் சான்று (Censor Certificate) தொடர்பான பணிகளுக்காக மும்பை சென்றுள்ளதாக ஒரு தரப்பு கூறுகிறது. மற்றொரு தரப்பில், மும்பையில் உள்ள அவரது நெருங்கிய குடும்ப நண்பர் ஒருவரின் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்வதற்காகச் சென்றுள்ளதாகவும், நாளை (சனிக்கிழமை) அவர் மீண்டும் சென்னை திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.
காரணம் எதுவாக இருந்தாலும், தவெக தலைவராக அரசியல் களத்தில் தீவிரமாக இருக்கும் வேளையில் விஜய்யின் இந்தத் திடீர் மும்பை பயணம் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: திமுக ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி.. அது அதிமுகவுக்கு சாதகமாக அமையும் ..!! ஒரே போடாக போட்ட ராஜேந்திர பாலாஜி..!!