அடுத்தடுத்து அதிரடி காட்டும் விஜய் அரசு... நாளை மின்துறை வெள்ளை அறிக்கை வெளியீடு..!
மின்துறை வெள்ளை அறிக்கை நாளை வெளியாகிறது.
கடந்த DMK ஆட்சியில் மின்சாரத் துறையில் பெரும் முறைகேடுகள் நடைபெற்றதாக தவெக அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. சோலார் திட்டங்கள், டிரான்ஸ்பார்மர் கொள்முதல், மின் கொள்முதல் ஒப்பந்தங்கள் மற்றும் கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்களில் லஞ்சம் மற்றும் ஊழல் பரவலாக இருந்ததாக அமைச்சர் நிர்மல்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
ஒரு மெகாவாட் சோலார் இணைப்புக்கு ரூ. 25 லட்சம் வரை லஞ்சம் கேட்கப்பட்டதாகவும், பல ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் இன்னும் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் புதிய தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, மாநிலத்தின் ஒட்டுமொத்த நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை ஜூன் 16 அன்று வெளியிட்டது.
அதன் தொடர்ச்சியாக, மின்சாரத் துறை சார்பில் தனி வெள்ளை அறிக்கை ஒன்று நாளை (ஜூன் 25) காலை வெளியிடப்பட உள்ளது. மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் இதை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த அறிக்கை தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் தற்போதைய நிலை, நிதிச் சுமை, கடந்த ஆட்சியில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் எதிர்கால சீர்திருத்தத் திட்டங்கள் ஆகியவற்றை விரிவாக ஆவணப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ‘ரீல்ஸை’ விட்டுட்டு ‘ரியாலிட்டிக்கு’ வாங்க என முதல்வர் விஜயை சாடிய ஜெயக்குமார்!
முன்னதாக, அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களிடம் பேசியபோது, “ஒவ்வொரு பிரிவின் நிலை, இழப்புகள், ஊழல் நடைபெற்ற பகுதிகள் ஆகியவை அறிக்கையில் இடம்பெறும். ஆனால் தனிப்பட்ட ஊழல்வாதிகளின் பெயர்கள் குறிப்பிடப்படாது” என்று தெரிவித்தார். DVAC மற்றும் TANGEDCO-வின் விழிப்புணர்வுப் பிரிவு ஏற்கெனவே ஊழல் வழக்குகளை விசாரித்து வருவதாகவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: வகுப்பறைக்குள் ரீல்ஸ் கலாச்சாரம்... தவெகவுக்கு மாணிக்கம் தாகூர் கட் அண்ட் கறார் அட்வைஸ்...!