பரந்தூர் நிலத்தில் பல்லாங்குழி ஆடும் தவெக அரசு! நயினார் நாகேந்திரன் கண்டனம்!
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிட்டு புதிய இடத்தைத் தேர்வு செய்வது நேர விரயம் என தவெக அரசுக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விளைநிலங்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகப் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்த தவெக அரசு, அதே இடத்தில் பிற தொழில் திட்டங்களைத் தொடங்குவோம் எனக் கூறுவது அப்பட்டமான முரண்பாடு; பரந்தூர் நிலங்களை வைத்துக்கொண்டு அரசு பல்லாங்குழி ஆடுகிறது என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மிகக் காட்டமாகச் சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விமான நிலையம் கட்டுவதற்காகப் பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட சுமார் 1,700 ஏக்கர் நிலங்களில் சிப்காட் உள்ளிட்ட பிற தொழில் திட்டங்களைத் தொடங்குவோம் என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்? தொழில் திட்டங்கள் தொடங்கினால் மட்டும் விளைநிலங்கள் பாதிக்கப்படாதா? உண்மையிலேயே விவசாயிகளின் மீது அக்கறை இருந்தால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும்.
2013 நிலக் கையகப்படுத்துதல் சட்டப்பிரிவு 99-ன் படி, எதிர்பாராத சூழல் ஏற்பட்டால் மட்டுமே கையகப்படுத்தப்பட்ட நிலங்களை வேறு பொது நோக்கத்திற்குப் பயன்படுத்த முடியும். கிரீன்ஃபீல்ட் விமான நிலையத் திட்டத்திற்காக நிலம் எடுத்துவிட்டு, அதை அவசர அவசரமாக வேறு நோக்கத்திற்குப் பயன்படுத்த தவெக அரசுக்கு என்ன சட்ட அதிகாரம் இருக்கிறது? என்று அடுக்கடுக்காகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: கர்நாடகாவில் போலி என்கவுண்டர்.! சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தும் நயினார்.! செவி சாய்ப்பாரா CM..?
மேலும் அண்டை மாநிலப் போட்டிகளைச் சுட்டிக்காட்டிய அவர், ஆந்திர அரசு சித்தூர் மாவட்டம் குப்பம் பகுதியில் சென்னை - பெங்களூரு விரைவுச் சாலையை ஒட்டி புதிய விமான நிலையப் பணிகளைத் தீவிரப்படுத்தி வருகிறது. இதனால் தமிழகத்திற்கு வர வேண்டிய பெரும் தொழில் முதலீடுகளும் வர்த்தகப் போக்குவரத்தும் ஆந்திராவை நோக்கிச் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தலைநகர் சென்னை அல்லது அதன் அருகில் சர்வதேச தரத்திலான புதிய விமான நிலையம் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு மிக அவசியமானது" என்று குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக, அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆய்வு செய்து ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட பரந்தூரைப் புறந்தள்ளிவிட்டு, தற்போது புதிய இடத்தை மீண்டும் தேடிக் கண்டுபிடித்துப் பணிகளைத் தொடங்குவது முழுக்க முழுக்கத் திட்டமிடப்பட்ட காலதாமதமும் நேர விரயமுமே ஆகும். முதலமைச்சர் தனது அரசியல் லாபத்திற்காக மக்கள் நலத் திட்டங்களில் எடுத்தோம் கவிழ்த்தோம் எனச் செயல்படுவது தமிழகத்தின் வளர்ச்சிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று நயினார் நாகேந்திரன் எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: மாணவர்கள் உயிரோடு விளையாட்டா.? விளம்பரம் மட்டும் போதுமா.? தவெக அரசை விளாசிய நயினார்..!!