அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு ‘ஷாக்’! தவெகவில் பதவி கிடைக்காமல் காத்திருப்பு! மாஜிக்கள் அதிருப்தி!
ஆரம்பத்தில் கட்சி நிகழ்ச்சிகளில் தங்களுக்கு முக்கியத்துவமும் முன்னுரிமையும் வழங்கப்பட்டதாகவும், தற்போது அதிகாரப்பூர்வ பதவி இல்லாததால் அந்த முக்கியத்துவம் குறைந்துவிட்டதாகவும் அவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க.வில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட சில முக்கிய பிரமுகர்களுக்கு இதுவரை எதிர்பார்த்த கட்சி பதவிகள் வழங்கப்படவில்லை என்ற தகவல், அக்கட்சி வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு அ.தி.மு.க.வில் இருந்து பல்வேறு நிர்வாகிகள் விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக சில முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கட்சியில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றது.
எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்த சிலருக்கு கட்சியில் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட சில முக்கிய பிரமுகர்களுக்கு இதுவரை எந்த முக்கிய பதவியும் வழங்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் அவர்கள் அதிருப்தியில் இருப்பதாக கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சிக்கலில் சோழவந்தான் MLA..! ஜல்லிக்கட்டுக்கு தடையா..? TTV தினகரன் சரமாரி கேள்வி.!
த.வெ.க.வில் இணைந்த சிலர் கூறியதாக வெளியாகியுள்ள தகவலின்படி, கட்சியில் சேருவதற்கு முன்பு நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் கட்சி பதவி மற்றும் வாரிய பதவி உள்ளிட்ட பொறுப்புகள் வழங்கப்படும் என உறுதிமொழிகள் அளிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை நம்பியே அ.தி.மு.க.வில் வகித்து வந்த பதவிகளை விட்டு த.வெ.க.வில் இணைந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
ஆரம்பத்தில் கட்சி நிகழ்ச்சிகளில் தங்களுக்கு முக்கியத்துவமும் முன்னுரிமையும் வழங்கப்பட்டதாகவும், தற்போது அதிகாரப்பூர்வ பதவி இல்லாததால் அந்த முக்கியத்துவம் குறைந்துவிட்டதாகவும் அவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
மேலும், பதவி தொடர்பாக தலைமை நிர்வாகிகளிடம் கேட்கும்போது, தங்களது தொழில் நடவடிக்கைகள் நன்றாகத்தானே நடக்கிறது எனக் கூறி விவகாரம் தள்ளிப்போடப்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். வாரியப் பதவி குறித்து கேட்டால், அதற்கு முதல்வரின் ஒப்புதல் தேவை என பதில் அளிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
பல ஆண்டுகளாக அரசியல் பதவிகளில் இருந்து வந்த நிலையில் தற்போது எந்த அதிகாரப்பூர்வ பொறுப்பும் இல்லாமல் இருப்பது தங்களுக்கு மட்டுமின்றி தங்களை நம்பி வந்த ஆதரவாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
எனினும், பதவி வழங்குவது தொடர்பாக த.வெ.க. தலைமை தரப்பில் அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் வெளியாகவில்லை. கட்சியின் அமைப்பு விரிவாக்கப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், புதிதாக இணைந்த முக்கிய பிரமுகர்களுக்கு எப்போது பொறுப்புகள் வழங்கப்படும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க.வில் இருந்து வரும் முக்கிய நிர்வாகிகளுக்கு த.வெ.க.வில் உரிய இடம் கிடைக்குமா அல்லது கட்சி பதவிகளுக்கான காத்திருப்பு மேலும் நீடிக்குமா என்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
இதையும் படிங்க: மேலூரில் மட்டும்தான் மோசடியா.? தமிழகம் முழுவதும் டார்கெட்.? சந்தேகத்தைக் கிளப்பிய வேல்முருகன்.!!