×
 

ராகுலை டீலில் விட்ட விஜய்... தவெக மெளனத்தால் கலக்கத்தில் காங்கிரஸ்... பாஜக மீது பயமா?

முதலமைச்சர் விஜய் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்காதது காங்கிரஸாருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்ட சம்பவமும் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால், கூட்டணியில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் த.வெ.க. மற்றும் அதன் தலைவர், முதலமைச்சர் விஜய் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்காதது காங்கிரஸாருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஜந்தர் மந்தரில் போராடி வரும் மாணவர்களுக்கு ஆதரவாகவும், நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் பதவி விலகக்கோரி பிரதமர் இல்லம் அருகே 3 மணி நேரத்திற்கும் மேலாக காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸ் பேச்சுவார்த்தை நடத்தியும் கலைந்து செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் எம்.பி.க்கள் பங்கேற்றனர்.  ராகுல்காந்தி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பிக்கள் கைது செய்யபட்டனர்.

பிரதமர் இல்லம் அருகே நீட் விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தியை, போலீசார் குண்டுக்கட்டாக இழுத்துச் சென்று கைது செய்தபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டு அவரது மூக்கில் காயம் ஏற்பட்டது. அப்போது அவரது மூக்கில் லேசான ரத்தம் கசிந்தது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பிற்பகலில் கைது செய்யப்பட்ட அவர், இரவு 9 மணியளவில் விடுவிக்கப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்த விவகாரத்தில் பல்வேறு தரப்பினரும் மத்திய அரசுக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

இதையும் படிங்க: பழனி நில மோசடி விவகாரம்..! சிபிஐ விசாரணை தேவை... அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!!

ஆனால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜய் ராகுல் கைதிற்கு கண்டனம் தெரிவிக்காதது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பு நடந்த சம்பவங்களின் போது முதலமைச்சர் கருத்து தெரிவிக்கவில்லை என்றால், அதை ஒரு அரசியல் உத்தியாகக் கருதி அமைதி காக்கிறார் என்று சொல்லலாம். 

ஆனால், நேற்று கூட்டணியில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டார். அந்தக் கைது பலராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இருந்தபோதிலும், முதலமைச்சர் விஜய் இதுவரை எந்தக் கருத்தையும் வெளியிடாதது ஆச்சரியமாக உள்ளது.

த.வெ.க.வின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் இந்தச் சம்பவம் தொடர்பாக பதிவு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், அமைச்சர் ராகவ் அர்ஜுனும் வலுவான கருத்தைப் பதிவிட்டுள்ளார். ஆனால், மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்தது முதலமைச்சர் விஜயைத்தான். அவரது தனிப்பட்ட மக்கள் செல்வாக்கே தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது. எனவே, இத்தகைய சம்பவங்களில் அவரிடமிருந்து நேரடியான கருத்தையோ அல்லது கண்டனத்தையோ மக்கள் எதிர்பார்ப்பது இயல்பானதே.

தேர்தலுக்கு முன்பு 'ஜனநாயகன்' திரைப்படம் தொடர்பான பிரச்சினை எழுந்தபோது, ராகுல் காந்தி விஜய்க்கு ஆதரவு தெரிவித்திருந்தார். அப்படிப்பட்ட சூழலில், தற்போது கூட்டணியில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், குறைந்தபட்சம் ஒரு கண்டனத்தையாவது முதலமைச்சர் தெரிவித்திருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால், அது இதுவரை நடக்காதது ஆச்சரியமாகவே உள்ளது.

இதையும் படிங்க: உணவின் தரம், அடிப்படை வசதிகள்..! சமூக நீதி விடுதியில் அமைச்சர் சம்பத் திடீர் ஆய்வு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share