விசிலுக்கு தடை… சத்தம் தூக்கம் கலைக்குதோ? ஜுரம் வந்துடுச்சு போல… TVK விமர்சனம்..!
சேப்பாக்கத்தில் விசில் சத்தம் கேட்டாலே சிலருக்கு ஜுரம் வந்து விடுகிறதோ என தவெக விமர்சித்துள்ளது.
சென்னையின் சேப்பாக்கம் மைதானம் என்றாலே ரசிகர்களின் ஆரவாரம், கோஷங்கள், விசில் சத்தம் எல்லாம் இணைந்த ஒரு தனித்துவமான சூழலை நினைவுபடுத்தும். குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் ஆடும் போட்டிகளில் அந்த விசில் ஒலி மைதானத்தை அதிர வைப்பது வழக்கம். ஆனால் சமீபத்தில், 2026 டி20 உலகக் கோப்பை தொடரின் போது, குறிப்பாக நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் போட்டியின்போது, மைதானத்திற்குள் ரசிகர்கள் விசில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது போன்ற தகவல்கள் பரவின.
இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியது.இந்த தடை குறித்து முதலில் சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியாகின. ரசிகர்கள் கதவுகளில் விசில் இருந்தால் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், மைதானத்திற்கு வெளியே விற்கும் கடைக்காரர்களுக்கு கூட விசில் விற்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதனால் பலரும் ஏமாற்றமடைந்தனர். சேப்பாக்கம் என்றால் விசில் இல்லாமல் எப்படி ஆரவாரம் செய்வது என்ற கேள்வி எழுந்தது.
சிலர் இதை அரசியல் காரணங்களோடு தொடர்புபடுத்தினர். நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு தேர்தல் சின்னமாக விசில் ஒதுக்கப்பட்டிருப்பதால், வரும் சட்டமன்றத் தேர்தல் பின்னணியில் பாதுகாப்பு காரணமாக இந்த தடை விதிக்கப்பட்டிருக்கலாம் என்ற ஊகங்கள் எழுந்தன. இத்தனை ஆண்டுகளாக இல்லாத புது விதியாக, இப்போது சேப்பாக்கம் மைதானத்திற்குள் விசில் கொண்டு வர தடை விதித்திருக்கிறார்கள் என்றும் ஏன் எனவும் தவெக கேள்வி எழுப்பி உள்ளது.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் தவெக விருப்ப மனு விநியோகம்..!! கேட்கப்படும் 36 கேள்விகள்..!! என்னென்ன தெரியுமா..??
சேப்பாக்கத்தில் விசில் சத்தம் கேட்டாலே சிலருக்கு "ஜூரம்" வந்துவிடுகிறதோ என்றும் விளையாட்டு மைதானம் என்பது மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் இடம்., அங்கே போய் விசிலுக்குத் தடை விதிப்பது என்பது, மக்களின் கொண்டாட்ட உரிமையைப் பறிக்கும் செயல் என்றும் கூறப்பட்டுள்ளது. மைதானத்திற்குள் வரும் விசிலைத் தடுத்துவிடலாம், ஆனால் மக்களின் மனதிற்குள் ஒலிக்கும் மாற்றத்திற்கான விசிலை யாரால் தடுக்க முடியும் என கேட்டுள்ளது.
சின்ன சின்ன விஷயங்களில் கூட இப்படி கெடுபிடி காட்டும் இந்த நிர்வாக முறையை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது என்றும் மக்களின் கொண்டாட்டங்களைச் சீண்டும் இத்தகைய "விசித்திர" விதிகள், உண்மையில் ஆட்சியாளர்களின் தோல்வி பயத்தையே காட்டுகிறது என்றும் தெரிவித்துள்ளது. நீங்கள் பிடுங்குவது விசிலை அல்ல, ரசிகர்களின் உரிமையை என்று கூறியுள்ள தவெக நாளை தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் மக்கள் போடப்போகும் வெற்றி விசில் சத்தத்தில், இப்போதைய ஆட்சியாளர்களின் தூக்கம் நிச்சயம் கலைந்து போகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆன்லைனுக்கு மாறிய TVK விருப்ப மனு... வெறிச்சோடிய பனையூர் அலுவலகம்..!