×
 

வாரத்திற்கு வாரம் நிலைப்பாட்டை மாற்றுவதா? முதல்வர் விஜய்க்கு டிடிவி தினகரன் கேள்வி!

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தவெக அரசு சட்டமன்றத்தில் நடத்திய தீர்மான நாடகம் தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் அம்பலமாகிவிட்டதாக டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் வாரத்திற்கு வாரம் தனது நிலைப்பாட்டை மாற்றி இரட்டை வேடம் போடுவதாகவும், தமிழகத்தின் தலையாய வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் திசைதிருப்பவே சட்டப்பேரவையில் 'தீர்மான நாடகத்தை' அரங்கேற்றியுள்ளார் என்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மிகக் கடுமையான கண்டனத்தை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள காரசாரமான அறிக்கையில், சென்னை கோவளத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், தொகுதி மறுவரையறையில் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையாமல் இருக்கச் சட்டரீதியாக உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருப்பதைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி தவெக தோழமைக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டி, ஆகஸ்ட் 12-ஆம் தேதி சட்டமன்றத்தில் தொகுதி மறுவரையறைக்கு எதிராக அவசர அவசரமாகத் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, ஒரே வாரத்தில் தென் மண்டலக் கவுன்சில் கூட்டத்தில் தனது நிலைப்பாட்டை முற்றிலும் மாற்றியிருப்பது அப்பட்டமான அரசியல் முரண்பாடு எனச் சாடியுள்ளார்.  

இதையும் படிங்க: "மக்களவை இடங்கள் 543 ஆக நிரந்தரமாக வேண்டும்" - சட்டமன்ற தீர்மானத்துடன் பிரதமருக்கு தமிழக அரசு அழுத்தம்!

மக்களவைத் தொகுதி மறுவரையறை தொடர்பாக மத்திய அரசால் நாடாளுமன்றத்தில் எந்தவொரு அதிகாரப்பூர்வ சட்ட வரைவோ அல்லது அறிவிப்போ வெளியிடப்படாத சூழலில், தமிழக அரசு அடுத்தடுத்து ஆலோசனைக் கூட்டங்களையும் தீர்மானங்களையும் கொண்டு வந்து அரசியல் ஆதாயம் தேட முயன்ற நாடகம், முதலமைச்சர் விஜயின் தென்மண்டல கவுன்சில் உரை மூலமாகவே மக்கள் மத்தியில் முழுமையாக அம்பலமாகிவிட்டதாகத் தெரிவித்தார். 

தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்களின், குறிப்பாகத் தமிழ்நாட்டின் மக்களவைப் பிரதிநிதித்துவம் குறையாது என ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பொதுவெளியில் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், அதே உள்துறை அமைச்சரின் முன்னிலையிலேயே முதலமைச்சர் விஜய் இத்தகைய கோரிக்கையை முன்வைத்துப் பம்முவது நகைப்புக்குரியதாக உள்ளது என்றும் விமர்சித்துள்ளார்.


தேர்தலுக்கு முன்பாக மக்களுக்கு அள்ளி வீசிய வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்த பிறகு நிறைவேற்றாமல் விவசாயிகளையும் பொதுமக்களையும் ஏமாற்றி வரும் தவெக அரசு, மக்களைத் திசைதிருப்பவே இதுபோன்ற வெற்றுத் தீர்மானங்களை முன்னெடுக்கிறது என்று சாடிய டிடிவி தினகரன், வாரத்திற்கு வாரம் அந்தர் பல்டி அடிக்கும் தவெக அரசின் உண்மையான நிலைப்பாடுதான் என்ன எனக் கேள்வி எழுப்பினார்.

எனவே, தமிழகத்தின் அவசியமான பிரச்சினைகளைத் திசைதிருப்பும் விளம்பர அரசியலைக் கைவிட்டு, மக்களின் வாழ்வாதாரம் மற்றும் மாநில நலன் சார்ந்த ஆக்கப்பூர்வமான பணிகளில் முதலமைச்சர் கவனம் செலுத்த வேண்டும் என அவர் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம்..!! ஆதரவு தெரிவித்த ம.ஜ.க., ம.ம.க., காங்கிரஸ் கட்சிகள்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share