இன்ஸ்டா பயன்படுத்துவதில் தவறில்லை! எலான் மஸ்க்கை உதாரணம் காட்டி தவெக அமைச்சருக்கு கார்த்தி சிதம்பரம் ஆதரவு!
தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்க்க தவெக நல்லரசு இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதில் தவறில்லை எனச் சிவகங்கை காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
உலகப் பெரும் கோடீஸ்வரர் எலான் மஸ்க் தனது உத்தியோகபூர்வ அறிவிப்புகள் அனைத்தையும் 'எக்ஸ்' (முன்னாள் ட்விட்டர்) சமூக வலைத்தளத்தில்தான் வெளியிடுகிறார். அதுபோல, தமிழ்நாட்டிற்குப் புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காகத் தற்போதைய தொழில்துறை அமைச்சர் இன்ஸ்டாகிராம் (Instagram) மற்றும் 'ரீல்ஸ்' பக்கங்களைப் பயன்படுத்துவதில் எவ்விதத் தவறும் இல்லை என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் அவர்கள் அதிரடியாகப் பதிலளித்துள்ளார்.
புதிய தவெக அரசின் தொழில்துறை அமைச்சர் சமூக வலைத்தளங்களில் 'ரீல்ஸ்' போடுவதாக திமுக முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி நேற்று கோவையில் கடுமையாக விமரிசித்திருந்த நிலையில், அதற்குத் தார்மீகப் பதிலடி கொடுக்கும் வகையில் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் இன்று காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார்.
திரைப்பட உலகைச் சேர்ந்தவர்கள் தற்பொழுது ஆளுங்கட்சியாகப் பொறுப்பேற்றுள்ள சூழலில், புதிய உத்திகளைக் கையாண்டு இளைஞர்களைக் கவரும் வகையிலும், சர்வதேச முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும் இன்ஸ்டாகிராம் போன்ற நவீன தொழில்நுட்ப ஊடகங்களைப் பயன்படுத்துவது காலத்தின் கட்டாயமாகும். எலான் மஸ்க் போன்ற உலகளாவிய தொழில் அதிபர்களே தங்களது நிறுவன அப்டேட்டுகளைச் சமூக வலைத்தளங்களில்தான் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்கள். அப்படி இருக்கையில், தமிழகத் தொழில்துறை அமைச்சர் இன்ஸ்டா பயன்படுத்துவதை ஒரு குறையாகச் சொல்ல முடியாது.
இதையும் படிங்க: காங்கிரஸில் 5 அமைச்சர்கள்..? சிரிப்புடன் சிக்னல் கொடுத்த கார்த்தி சிதம்பரம்..!!
அதேபோல், தமிழகத்தில் தவெக ஆட்சிக்குக் காங்கிரஸ் கட்சி தற்பொழுது கொடுத்துள்ள தார்மீக ஆதரவு என்பது மிகவும் இயல்பான ஒன்றுதான். மாநிலத்தில் ஒரு நிலையான, பலமான அரசாங்கம் (Stable Government) அமைய வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காகவே காங்கிரஸ் மேலிடம் இந்தத் தீர்க்கமான முடிவை எடுத்துள்ளது. தவெக - காங்கிரஸ் இடையே ஏற்பட்டுள்ள இந்த இணக்கமான முடிவு, இரு கட்சிகளின் எதிர்கால அரசியல் நகர்வுகளுக்கும், மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் பெரும் பலமாக அமையும் என்று கார்த்தி சிதம்பரம் மிகத் தெளிவாகத் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். திமுக எம்பிக்கள் டெல்லியில் காங்கிரஸை 'துரோகி' எனச் சாடி இண்டி கூட்டணி கூட்டத்தைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ள வேளையில், தவெக அரசுக்கு ஆதரவாகக் கார்த்தி சிதம்பரம் ஆற்றியுள்ள இந்தப் பேட்டி தமிழக அரசியல் வட்டாரத்தில் அனல் பறக்கும் விவாதங்களை மேலும் தூண்டியுள்ளது.
இதையும் படிங்க: பாட்டெல்லாம் பாடுனீங்களே.. இப்ப என்ன செஞ்சீட்டீங்க? தவெக அரசை வறுத்தெடுத்த செந்தில் பாலாஜி!