சட்டவிரோத பட்டாசு ஆலையில் வெடி விபத்து!! பெண் உட்பட 2 பேர் மரணம்! கோவில்பட்டியில் பகீர்!
பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த புளியங்குளத்தைச் சேர்ந்த ஐயப்பன், விருதுநகர் மாவட்டம் புல்லகவுண்டன்பட்டியை சேர்ந்த மாலதி ஆகியோர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள புளியங்குளம் கிராமத்தின் காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் போது ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன் மற்றும் விருதுநகர் மாவட்டம் புல்லகவுண்டன்பட்டியைச் சேர்ந்த மாலதி ஆகிய இருவரும் தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தபோது திடீரென பயங்கர வெடி சத்தத்துடன் விபத்து ஏற்பட்டது. சில வினாடிகளில் முழு கட்டிடமும் இடிந்து தரைமட்டமானது. இடிபாடுகளுக்குள் சிக்கிய ஐயப்பன் மற்றும் மாலதி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அதே இடத்தில் பணியாற்றிய சூரியபிரகாஷ் என்பவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டார். உடனடியாக தகவல் அறிந்த கோவில்பட்டி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்!! அலங்கார தூண் சரிந்தது!! பக்தர்கள் அதிர்ச்சி! விசாரணை தீவிரம்!
இடிபாடுகளுக்குள் சிக்கிய இரு உடல்களையும் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த சூரியபிரகாஷ் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு கோவில்பட்டி சார் ஆட்சியர், தாசில்தார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடனடியாக வந்து ஆய்வு செய்தனர். கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கப்பட்டதா, யாருக்கு சொந்தமான இடம், வேறு யாராவது ஈடுபட்டிருந்தனரா என்பது உள்ளிட்ட பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்டுப் பகுதியில் மறைந்து செயல்பட்ட இந்த சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு அலகு பல மாதங்களாக இயங்கி வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் பட்டாசு தயாரிப்பு அதிகரிக்கும் நிலையில், சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரிப்பதும், இத்தகைய விபத்துகள் ஏற்படுவதும் தொடர்ந்து வருவது பொதுமக்களை கவலையடையச் செய்துள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அதிகாரிகள் உரிய இழப்பீடு மற்றும் உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: "வலி தந்தாலும் நியாயம் இருக்கு”..! திமுகவிற்கு எதிராக போராடாதீங்க..! திருமா. அட்வைஸ்..!