×
 

"அதிசயமே அசந்து போகும்.. நீ எந்தன் அதிசயம்"..!! காதல் மனைவியுடன் தாஜ்மஹாலை ரசித்த அமெரிக்க மந்திரி..!!

ஆக்ரா பயணத்தை முடித்துக்கொண்டு ரூபியோ அடுத்து ஜெய்ப்பூர் செல்லவுள்ளார். அதன் பின்னர், நாளை காலை புதுடெல்லிக்குத் திரும்புகிறார்.

உலகப் புகழ்பெற்ற முகலாய கால நினைவுச் சின்னமான தாஜ்மஹாலை அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மார்கோ ரூபியோ தனது மனைவி ஜினெட் ரூபியோவுடன் இன்று காலை பார்வையிட்டார். கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் வரலாற்றுப் புகழ்மிக்க இந்த அற்புதத்தை ரசித்த ரூபியோ, அதை "உலகின் மிகச்சிறந்த காதல் பொக்கிஷங்களில் ஒன்று" என்று உணர்ச்சி பொங்க வர்ணித்தார். 

இந்தியாவுக்கு நான்கு நாள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள ரூபியோ, இன்று காலை 10 மணியளவில் தனி விமானம் மூலம் ஆக்ராவின் கெரியா விமான நிலையத்தை வந்தடைந்தார். விமான நிலையத்திலிருந்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கார் மூலம் தாஜ்மஹாலின் கிழக்கு வாசல் அருகே அமைந்துள்ள ஹோட்டலுக்குச் சென்ற அவர், அங்கிருந்து கோல்ஃப் கார்ட் வாகனம் மூலம் தாஜ்மஹால் வளாகத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டார். 

தாஜ்மஹாலைச் சுற்றிப் பார்த்த ரூபியோ தம்பதியர், யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களமான இந்த இடத்தின் முன்பு நின்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் செர்ஜியோ கோரும் உடன் இருந்த இந்தப் பயணத்தில், சுமார் ஒரு மணி நேரம் அவர்கள் தாஜ்மஹாலில் செலவிட்டனர். பார்வையாளர்கள் புத்தகத்தில் ரூபியோ எழுதிய குறிப்பு கவனத்தை ஈர்த்தது. "உலகின் மிகச்சிறந்த காதல் பொக்கிஷங்களில் ஒன்றை நாங்கள் பார்வையிட அனுமதித்ததற்கு நன்றி" என உணர்வுபூர்வமாகப் பதிவு செய்தார்.

இதையும் படிங்க: டெல்லியில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ..!! பிரதமர் மோடியுடன் முக்கிய மீட்டிங்..!!

விஐபி வருகையை முன்னிட்டு தாஜ்மஹால் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பாதுகாப்புக் காரணங்களுக்காக, ஏற்கனவே வளாகத்திற்குள் இருந்த சுற்றுலாப் பயணிகள் தற்காலிகமாக வெளியேற்றப்பட்டனர். இந்திய வானிலை ஆய்வு மையத் தகவலின்படி, உத்தரப் பிரதேசத்தில் தீவிரக் கோடை வெயில் நிலவும் நிலையில் இந்தப் பயணம் அமைந்துள்ளது. நேற்று ஆக்ராவில் 45.4 டிகிரி செல்சியஸ் அதிகபட்ச வெப்பநிலை பதிவானது குறிப்பிடத்தக்கது. ரூபியோவின் இந்தியப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆக்ரா சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்ட அவர் அடுத்து ஜெய்ப்பூர் செல்லவுள்ளார். நாளை காலை புது தில்லிக்குத் திரும்பும் அவர், அங்கு நடைபெறும் 'குவாட்' (Quad) நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். 

அமெரிக்கா-இந்திய உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இந்தப் பயணம் அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது. தாஜ்மஹால், உலக அதிசயங்களில் ஒன்றாக 17ஆம் நூற்றாண்டில் முகலாய பேரரசர் ஷாஜகானால் தனது மனைவி மும்தாஜ் மகலுக்காக கட்டப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இந்த நினைவுச் சின்னம், காதல் மற்றும் கட்டிடக்கலை அற்புதத்தின் சின்னமாகத் திகழ்கிறது. ரூபியோவின் வருகை, இந்தியாவின் கலாச்சார மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தின் மீதான அமெரிக்காவின் ஆர்வத்தைப் பிரதிபலிக்கிறது.

இதையும் படிங்க: 2 நாட்கள் அடித்து ஊற்றக் காத்திருக்கும் கனமழை! நாளை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share