வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!! வைகாசி விசாகம்: முருகன் கோயில்களில் குவியும் பக்தர்கள்..!
வைகாசி விசாகத்தையொட்டி முருகன் கோவில்களில் பக்தர்கள் பால்குடம் எடுத்தும் காவடி எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.
வைகாசி விசாகம் முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மிகவும் புனிதமான நாளாகக் கருதப்படுகிறது. முருகப்பெருமானின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. முருகப்பெருமானுக்கு எத்தனை விழாக்கள் எடுத்தாலும், வைகாசி விசாக விழா தான் வளர்ச்சியைக் கொடுக்கும் விழாவாக அமைகிறது. மேலும் வைகாசி என்ற பெயரில் புண்ணிய தலமான காசி என்பதும் வருவதால் அந்த மாதத்தில் காசிக்கு சென்று வருவது சிறப்பானதாக சொல்லப்படுகிறது.
நினைத்தது நடக்க வேண்டும், நம்முடைய வேண்டுதல்களும், வழிபாடுகளும் இரு மடங்கு பலனை அள்ளி தர வேண்டும் என்றால் வைகாசி விசாக நாளில் விரதமிருந்து, முருகப் பெருமானை மனம் உருக வழிபட வேண்டும்.
இதையும் படிங்க: முருகனை தரிசிக்க ரெடியா மக்களே..!! நெல்லை டூ திருச்செந்தூர்.. வைகாசி விசாக விழா சிறப்பு ரயில்கள்..!
இந்த வைகாசி விசாகம், முருகன் கோவில்களில் 10 நாட்கள் விழாவாக கொண்டாடப்படுகிறது. வைகாசி விசாகத்தன்று, பல பக்தர்கள் பால்குடம், காவடிகளை ஏந்தி, கந்தனின் அருளைப் பெற சுப்பிரமணியர் கோயில்களுக்கு பாதயாத்திரை மேற்கொள்கிறார்கள். அறுபடை வீடுகள் மட்டுமின்றி பிற முருகன் ஆலயங்களுக்கும் ஏராளமானோர் சென்று வழிபடுவது உண்டு.
அதன்படி தமிழகம் முழுவதும் இன்று வைகாசி விசாகம் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோயில்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு முருகனை மனமுருகி வழிபட்டு செல்கின்றனர்.
குறிப்பாக முருகனின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், திருத்தணி உள்ளிட்ட முக்கிய முருகன் ஸ்தலங்களில் மக்கள் அலைகடலென திரண்டு, விண்ணை பிளக்கும் அளவிற்கு அரோகரா கோஷம் எழுப்பி பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.
மக்கள் கூட்டம் கூட்டமாக கோயில்களுக்கு படையெடுப்பதால், பாதுகாப்பு கருதி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: விண்ணை பிளந்த அரோகரா கோஷம்.. திருச்செந்தூரில் கடலலையாய் திரண்ட பக்தர்கள்..!