ரோஜா.. ரோஜா..!! நாளை காதலர் தினம்..!! ரோஜா பூங்கொத்துகளுக்கு எகிறும் டிமாண்ட்..!! விலை அதிகரிப்பு..!!
காதலர் தினத்தையொட்டி ரோஜா பூக்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.
உலகெங்கும் கொண்டாடப்படும் காதலர் தினம் நாளை (பிப்ரவரி 14-ஆம் தேதி, சனிக்கிழமை) வருகிறது. இந்நாளை முன்னிட்டு காதலர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு பூங்கொத்து, ரோஜாப்பூக்கள், வாழ்த்து அட்டைகள், சாக்லேட்கள், பரிசுப் பொருட்கள் என பல்வேறு அன்பு அடையாளங்களை வழங்கி மகிழ்வது வழக்கமாக உள்ளது.
காதலின் உணர்வுகளை வெளிப்படுத்தும் மிகச் சிறந்த அடையாளமாக ரோஜாப்பூ நீண்ட காலமாகக் கருதப்படுகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினத்தன்று பூக்கடைகளில் ரோஜா விற்பனை பெருமளவு அதிகரிப்பதை வழக்கமாகக் காணலாம். இந்த ஆண்டும் அதே போக்கு தொடர்கிறது.
சென்னையின் மிகப்பெரிய மொத்த பூ சந்தையான கோயம்பேடு பூ மார்க்கெட்டில் கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு மற்றும் ஓசூர் பகுதிகளிலிருந்து பல்வேறு வண்ணங்களில் ரோஜா பூங்கொத்துகள் அதிக அளவில் வந்து குவிந்துள்ளன. சிவப்பு, இளஞ்சிவப்பு, மஞ்சள், வெள்ளை, ஆரஞ்சு உள்ளிட்ட பல நிறங்களில் அழகிய ரோஜாக்கள் குவிந்துள்ளன.
இதையும் படிங்க: VALENTINE SPECIAL: இன்று TEDDY DAY..!! ஒவ்வொரு கலருக்கும் ஒரு அர்த்தம்..!! தெரிஞ்சிக்கோங்க..!!
அதேநேரம், சென்னை நகரின் பல்வேறு வணிக வளாகங்கள், பெரிய ஷாப்பிங் மால்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சில்லறை பூக்கடைகளில் ரோஜா பூங்கொத்து விற்பனை பெரும் களை கட்டியுள்ளது. இங்கு விலைகள் கோயம்பேடு மொத்த சந்தையை விட இரண்டு முதல் மூன்று மடங்கு வரை அதிகமாக உள்ளன. இதனால் நகர்ப்புற காதலர்கள் நேரடியாக சில்லறை கடைகளில் அதிக விலை கொடுத்து வாங்கி வருகின்றனர்.
கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு பஞ்ச் (20 ரோஜாக்கள்) ரோஜா பூங்கொத்தின் தற்போதைய விலை விவரங்கள் பின்வருமாறு:
- சிவப்பு ரோஜா : ரூ.600
- மஞ்சள் ரோஜா : ரூ.600
- வெள்ளை ரோஜா : ரூ.400
- ஆரஞ்சு ரோஜா : ரூ.500
- பேபி பிங்க் ரோஜா : ரூ.400
- ஜூமா லியா ரோஜா : ரூ.350
இது குறித்து கோயம்பேடு மார்க்கெட்டில் பூங்கொத்து வியாபாரம் செய்து வரும் தேவராஜ் கூறுகையில், “இந்த ஆண்டு ரோஜா வரத்து கணிசமாகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் விலை சற்று உயர்ந்துள்ளது. இதனால் விற்பனை ஓரளவு மந்தமாகவே உள்ளது. மேலும், சென்னை பேருந்து நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டதால், புறநகர் பகுதிகளிலிருந்து சில்லறை வியாபாரிகள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வருவது வெகுவாகக் குறைந்துவிட்டது. இது எங்களது விற்பனையை பாதித்துள்ளது” என்றார்.
இருப்பினும், காதலின் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஆர்வத்தில் காதலர்கள் ரோஜா பூங்கொத்துகளை வாங்கி மகிழ்வதால், நாளை காதலர் தினத்தன்று பூக்கடைகளில் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: காதலர் தின ஸ்பெஷல்..!! ஓசூர் ரோஜா பூக்களுக்கு கூடுது மவுசு..!! குவியும் ஆர்டர்கள்..!!