×
 

717 மதுக்கடைகள் மூடல் ஒரு நல்ல தொடக்கம்..!! CM விஜய்க்கு நன்றி.. வானதி சீனிவாசன் வரவேற்பு..!!

மனமகிழ் மன்றங்களுக்கு வழங்கப்பட்ட (FL2) மதுபான உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், புதிய முதலமைச்சர் ஜோசப் விஜய் பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலுள்ள 717 டாஸ்மாக் மதுக்கடைகளை மூடிய உத்தரவை வரவேற்றுள்ளார். பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது என்று அவர் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்தார். 

“முதலமைச்சருக்கு நன்றி. இது வரவேற்கத்தக்க முதல் படி” எனக் குறிப்பிட்ட வானதி, கடந்த திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததே அவர்களது தோல்விக்கு முக்கிய காரணம் என்றார். மாநில அரசே நடத்தும் மதுக்கடைகள், பள்ளிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தாராளமாகக் கிடைத்தது இளைஞர்களைப் போதையின் பிடியில் தள்ளியதாகவும், இதனால் குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை பெண்களின் பாதுகாப்பு பெரிதும் பாதிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவத்தை உதாரணமாகக் காட்டிய வானதி, “மதுக்கடைகள் இல்லாத, போதை இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கினால்தான் இளைஞர் சமுதாயத்தை மேம்படுத்தவும், பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் முடியும்” என்றார். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நெடுஞ்சாலையோர மதுக்கடைகள் மூடப்பட்டபோது, அவை அமைதியாக உள் சாலைகளுக்கு மாற்றப்பட்டதையும், அதைவிடப் பல மடங்கு சட்டவிரோத சந்துக் கடைகள் திறக்கப்பட்டதையும் அவர் நினைவூட்டினார். 

இதையும் படிங்க: பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனைச் சந்தித்து நலம் விசாரித்தார் டெல்லி முதல்வர் ரேகா குப்தா!

தமிழ்நாட்டில் 20,000-க்கும் மேற்பட்ட சந்துக் கடைகள் இருப்பதாகவும், இதன் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், திமுக ஆட்சியில் FL2 உரிமம் என்ற பெயரில் முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மனமகிழ் மன்றங்கள் மற்றும் சமூக கிளப்புகளுக்கு மதுபான உரிமம் வழங்கப்பட்டது. இது இளைஞர்களிடையே மது அருந்துவதை சமூக அந்தஸ்தாக மாற்றி, பெரும் சமுதாயச் சீரழிவை ஏற்படுத்தியதாக வானதி விமர்சித்தார்.

இதனால், FL2 உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் விஜயிடம் வலியுறுத்திய அவர், படிப்படியாக மதுக்கடைகளை மூடி முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றார். மேலும், தமிழ்நாட்டில் உள்ள மொத்த மதுக்கடைகளின் எண்ணிக்கை, ஒவ்வொரு கடையின் வியாபார அளவு, மதுபானம் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் அவற்றின் உரிமையாளர்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இந்த நடவடிக்கைகள் தமிழ்நாட்டில் சமூக நலன் மற்றும் இளைஞர் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் முக்கிய அடியாகப் பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: தலைக்கீழான கொளத்தூர் தொகுதி..! 500க்கும் மேற்பட்ட திமுகவினர் தவெகவில் ஐக்கியம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share