5 ஓட்டு கூட முழுசா விழலையே... தமிழ்நாடே எதிர்பார்த்த ஏரியாவில் ஏமாற்றம்... அதிகாரிகள் ஷாக்...!
ஐந்து ஓட்டுகள் கொண்ட வெள்ளிமலை வாக்குச்சாவடியில் இன்று நான்கு வாக்குகள் வாக்குப்பதிவு
100% வாக்குப்பதிவு நடைபெறும் முதல் வாக்குச்சாவடி என்ற பெருமையை முதன்முறையாக வாக்குச் சாவடி அமைக்கப்பட்ட வெள்ளிமலை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றம்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் சரணாலயத்தில் வெள்ளிமலை என்ற அடர் வனப்பகுதிக்குள் வெறும் 5 வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டதை தேர்தல் ஆணையம் பெருமிதமாக அறிவித்தது. இதனால் வெள்ளிமலை வாக்குச்சாவடி இந்திய அளவில் ஜனநாயக முறைக்கு எடுத்துக்காட்டாக ஒரு ஹாட் டாபிக்காக மாறியது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற நிலையில் அடர் வனப்பகுதிக்குள் உள்ள வெள்ளிமலை வாக்குச்சாவடிக்கு ஒரு நாளைக்கு முன்பாகவே வாக்குப்பதிவு அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் 22 ஆம் தேதியே அனுப்பி வைக்கப்பட்டன. ஆண்டிப்பட்டியில் இருந்து சுமார் 75 கிலோ மீட்டர் தூரத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 5000 மீட்டர் உயரத்தில் உள்ள வெள்ளி மலைக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பயணம் நேற்று முன்தினம் 22 ஆம் தேதி காலை 12 மணி அளவில் தொடங்கியது.
இதையும் படிங்க: வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு... வாக்களிக்க முடியாமல் மக்கள் தவிப்பு... 50 நிமிடமாக காத்திருந்த கே.என்.நேரு...!
ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் மொத்தம் உள்ள 344 வாக்குச்சாவடிகளில் வெள்ளிமலை எண் 245 வாக்குச்சாவடிக்கு முன்பாக 40 கிலோமீட்டர் உள்ள மஞ்சனூத்து வனசோதனை சாவடியை கடந்து அடர் வனப்பகுதிக்குள், கரடு முரடான சாலையில் வாகனங்கள் ஆமை வேகத்தில் சென்றது.
காலை 12 மணிக்கு தொடங்கிய பயணம் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. சுமார் 6 மணி நேரம் பயணத்திற்கு பின்னர் வாக்குப்பெட்டிகள் வெள்ளிமலை வாக்குச்சாவடி அடைந்தன
இந்நிலையில் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு அதிகபட்சமாக ஒரு மணி நேரத்தில் 5 வாக்காளர்களும் வாக்களித்து விடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் வாக்குப்பதிவு துவங்கியவுடன் நான்கு வாக்காளர்கள் ஒன்றாக வந்து தங்களது வாக்குகளை அளித்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்கள்.
குறிப்பாக வாக்காளர்கள் செந்தில், ஜெயராணி தம்பதியினர் மற்றும் பவுல் , சுதா ஆகியோர் வாக்களித்தனர். ஆனால் ஐந்தாவது வாக்காளரான ரோஹித் வாக்களிக்க வரவில்லை. இதனால் வாக்குச்சாவடி அலுவலர்கள் மாலை 6 மணி வரை வாக்குச்சாவடி மையத்தில் வழக்கமான நடைமுறைப்படி பணியில் ஈடுபட்டனர்
மாலை 6 மணி வரை எஞ்சிய ஒரு வாக்காளரான ரோகித் வாக்களிக்க வரவில்லை. இதனால் மொத்தமுள்ள ஐந்து வாக்காளர்களில் நான்கு வாக்காளர்கள் மட்டுமே வெள்ளிமலை வாக்குச்சாவடியான எண் 245 ல் வாக்களித்தார்கள்.
மொத்தம் ஐந்து வாக்காளர்கள் மட்டுமே உள்ளதால் 100% வாக்குப்பதிவு வெள்ளிமலை வாக்குச்சாவடியில் நடைபெறும் என்று எதிர்பார்த்து அனைவரும் காத்திருந்த நிலையில் அது நடைபெறாதது வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
இதை அடுத்து நேற்று முன்தினம் பயணம் செய்த அதே தூரத்தை மாலை 6 மணிக்கு மேல் வாக்குப்பதிவு இயந்திரங்களை கரடு முரடான சாலையில் கொண்டு வரும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தேனி வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வெள்ளிமலையில் இருந்து வரும் வாக்குப்பெட்டிகள் இன்று காலை வந்து சேர்ந்ததாக ஆண்டிபட்டி தேர்தல் அலுவலர் கவிதா தெரிவித்துள்ளார்
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக 5 வாக்காளர்களே உள்ள ஒரு வாக்குச்சாவடியை புலிகள் சரணாலயத்திற்குள் அமைத்தது இந்திய தேர்தல் ஆணையம்.
இந்த வெள்ளிமலை வாக்கு சாவடிக்காக பிரத்தியேகமாக மண்டல அலுவலர் வகுப்பதிவு அலுவலர் சப்-இன்ஸ்பெக்டர் உதவியாளர் என ஆறு அதிகாரிகள் வாக்குப்பதிவு பணியில் ஈடுபட்டனர்
மேலும் ஆண்டிபட்டியில் இருந்து வனத்துறையினர் பாதுகாப்போடு ஜீப் உள்ளிட்ட இரண்டு வாகனங்கள் கரடு முரடான சாலையில் பெரும் சிரமப்பட்டு ப வாக்குப்பதிவு இயந்திரங்களை சுமந்து சென்று வாக்குப் பதிவை முடித்து மீண்டும் அதே சாலையில் திரும்பி வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வந்து கொண்டிருக்கிறது
இந்திய ஜனநாயகத்தின் மேன்மையை உலகிற்கு பறைசாற்றும் விதமாக வெள்ளிமலை வாக்குச்சாவடி மையம் முதல் முறையாக அமைக்கப்பட்டு ஜனநாயக கடமையை நிறைவேற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது
இதையும் படிங்க: திருமண மண்டப கோலத்தில் மாதிரி வாக்குச்சாவடி..,! நன்னாரி சர்பத் வழங்கி வாக்காளர்களை வரவேற்க தயார்...!