×
 

மின்வெட்டா.? மின் திருட்டா.? தவிக்குது தமிழ்நாடு..! வேல்முருகன் ஆவேசம்..!!

மின்வெட்டு தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் சரமாரி கேள்விகளை முன் வைத்தார்.

தமிழகம் இருட்டில் இருக்கும் நிலையில் கார்ப்பரேட்டுகள் வெளிச்சத்தில் இருக்கிறதா என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பினார். மின்வெட்டா? மின் திருட்டா? என்றும் கேட்டுள்ளார். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒவ்வொரு நாளும், குறிப்பாக இரவு நேரங்களில், தொடர்ச்சியாக நிகழும் மின்வெட்டுகள் மக்களின் இயல்பு வாழ்க்கையைச் சிதைத்துக் கொண்டிருப்பதாக கூறினார்.

கடும் வெப்பத்தால் தகிக்கும் இரவுகளில், குழந்தைகள் தூங்க முடியாமல் தவிக்கின்றனர். முதியவர்கள் மூச்சுத் திணறலோடு இரவைக் கழிக்கின்றனர் என்றும் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களின் கனவுகள் இருளில் கரைகின்றன எனவும் தெரிவித்தார். சிறு தொழில் செய்பவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ள வேல்முருகன், மின்சாரம் என்பது வெறும் வசதி அல்ல. இன்றைய காலகட்டத்தில் அது மனிதர்களின் அன்றாட வாழ்வின் அவசியத் தேவையாக மாறியுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்படும் போதெல்லாம் பாதிக்கப்படுவது சாதாரண ஏழை நடுத்தர மக்களின் வாழ்க்கை மட்டுமே என்றும் கூறினார்.

தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்று தொடர்ந்து கூறப்பட்டு வரும் நிலையில், இந்த நீண்ட நேர மின்வெட்டுகளுக்கான உண்மையான காரணம் என்ன? உற்பத்தி குறைவா? நிர்வாகத் தோல்வியா? பராமரிப்புப் பணிகளா? அல்லது மக்களுக்குச் செல்ல வேண்டிய மின்சாரம் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் தேவைகளுக்காகத் திருப்பிவிடப்படுகிறதா? என அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்தார். இன்று மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் இந்த சந்தேகத்தை வெறும் அரசியல் விமர்சனமாகக் கடந்து செல்ல முடியாது. ஏனெனில், இருளில் தவிப்பது ஏழை மக்களின் வீடுகள். ஆனால் வெளிச்சத்தில் இயங்கிக் கொண்டிருப்பது பெரும் தொழில் வளாகங்களும் கார்ப்பரேட் நிறுவனங்களும்தான் என்ற காட்சியே மக்களின் மனதில் கேள்விகளை உருவாக்குகிறது என்று கூறினார்.

இதையும் படிங்க: தவெக அமைச்சர் நிகழ்ச்சியில் அடுத்தடுத்து அரங்கேறிய அவலங்கள்... அதிர்ச்சியில் மக்கள்...!

இதற்கான தெளிவான விளக்கத்தை வழங்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர்கள் கள்ள மௌனம் காக்கின்றனர் என்றும் மக்கள் கேட்பது மின்சாரத்தை மட்டும் அல்ல. உண்மையையும், வெளிப்படைத்தன்மையையும், பொறுப்புணர்வையும் தான் என்றும் அவர் குறிப்பிட்டார். எனவே, தமிழ்நாடு அரசு தொடர்ச்சியாக நடைபெற்று வரும் மின்வெட்டுகள் தொடர்பான உண்மையான காரணங்களை வெளிப்படையாக மக்களிடம் அறிவிக்க வேண்டும் என்றும் மாவட்ட வாரியான மின்சார உற்பத்தி, தேவை மற்றும் விநியோகம் குறித்த முழுமையான தகவல்களை பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அதிமுக எம்எல்ஏக்கள் 21 பேர் பதவி தப்பியது..! எடப்பாடி என்ன சொன்னாரு..? சபாநாயகர் பிரபாகர் பேட்டி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share