"விஜய் கட்சிக்குத் தாவத் துடிக்கும் அதிமுக மாஜிக்கள்!" ஆர்.எஸ்.பாரதி அதிரடி பேச்சு!
செங்குன்றத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, அதிமுக மற்றும் மத்திய அரசை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதிமுகவிலிருந்து யார் எப்போது வெளியேறுவார்கள் எனத் தெரியாமல் எடப்பாடி பழனிசாமி பயத்தில் இருப்பதாகவும், அவரது முக்கிய தளபதிகளே வேறு இடத்திற்குத் தாவத் தயாராக இருப்பதாகவும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில், தமிழகத்தைப் புறக்கணிக்கும் ஒன்றிய பட்ஜெட் மற்றும் அதற்குத் துணை போகும் அதிமுகவை கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தலைமை வகித்து ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது,
எடப்பாடி பழனிசாமி 3 மாதங்களுக்கு ஒருமுறை பொதுக்குழுவை கூட்டி, யாரெல்லாம் கட்சியை விட்டு ஓடினார்கள் என்று கணக்கெடுத்துக் கொண்டிருக்கிறார். வாக்காளர் பட்டியலில் 'டபுள் என்ட்ரி' இருப்பது போல, அதிமுகவின் முக்கியத் தூண்களாகக் கருதப்படும் வேலுமணி, தங்கமணி போன்றவர்களே விஜய் கட்சிக்குச் செல்லலாமா, திமுகவிற்குச் செல்லலாமா அல்லது பாஜகவிற்குச் செல்லலாமா என்று ரகசியமாகத் திட்டமிட்டு வருகிறார்கள். செங்கோட்டையன் முதல் அன்வர் ராஜா வரை ஒவ்வொரு பொதுக்குழுவிலும் இடம் பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இதையும் படிங்க: திமுகவின் தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது: சேலத்தில் புஸ்ஸி ஆனந்த் ஆவேசம்!
தமிழ்நாடு 1 ரூபாய் வரியாகச் செலுத்தினால், மத்திய அரசு நமக்கு வெறும் 27 பைசாவை மட்டுமே திருப்பித் தருகிறது. ஆனால், உத்திரபிரதேசம் மற்றும் பீகாருக்கு நாம் கட்டும் வரியை வாரி வழங்குகிறார்கள். இவ்வளவு நெருக்கடியிலும் முதல்வர் ஸ்டாலின் தனது நிர்வாகத் திறமையால் பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கி வருகிறார். கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு முட்டுக்கட்டைப் போடும் நிர்மலா சீதாராமன், வீதி வீதியாக வந்து மக்களைச் சந்தித்தால் தான் மக்களின் துயரம் புரியும்.
"பட்ஜெட்டை முழுமையாகப் படிக்கும் முன்பே எடப்பாடி பழனிசாமி அதற்குப் பாராட்டுத் தெரிவிக்கிறார். தன் மீதும், தன் சம்மந்தி மற்றும் உறவினர்கள் மீதும் உள்ள வழக்குகளில் இருந்து தப்பிக்கவே அவர் பாஜகவிடம் சரணடைந்துள்ளார். 'மேலே இருக்கிறவன் பார்த்துக் கொள்வான்' எனத் தொண்டர்களிடம் கூறுகிறார். திமுகவின் சட்டத்துறை வலுவாக இருக்கும் வரை மேலே இருப்பவன் மட்டுமல்ல, ஆண்டவனாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது."
"ஆங்கிலேயர் காலத்தில் தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்பட்ட உரிமைகளை கூட மோடி அரசு ஒரு மணி நேரத்தில் பறித்துவிட்டது. முதலாளிகள் எப்போது வேண்டுமானாலும் தொழிலாளர்களை நீக்கலாம் என்ற நிலையை உருவாக்கிவிட்டார்கள். 100 நாள் வேலைத் திட்டத்திற்கு நிதி ஒதுக்காமல் ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறார்கள்" என ஆர்.எஸ்.பாரதி தனது உரையில் குறிப்பிட்டார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, காங்கிரஸ், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் கலந்துகொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: திமுக ஒரு இலக்க இடங்களிலேயே சுருங்கும்! மதுரையில் அன்புமணி ராமதாஸ் காட்டம்!