×
 

வியட்நாம் படகு விபத்து நடந்தது எப்படி? உயிர்தப்பியவர்கள் சொன்ன திக் திக் நிமிடங்கள்!! முழு விவரம்!

வியத்நாமின் ‘ஃபூ குவோக்’ தீவு அருகே கடலில் சனிக்கிழமை விசைப் படகு கவிழ்ந்த விபத்தில் தமிழகத்தைச் சோ்ந்த 10 போ் உள்பட 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்ததனா்.

வியட்நாமின் ஃபூ குவோக் தீவு அருகே ஏற்பட்ட படகு விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் உட்பட 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்பச் சுற்றுலாவாக சென்ற பயணம் சில நிமிடங்களில் துயரமாக மாறிய இந்த விபத்து பல குடும்பங்களை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.

லாவா கைப்பேசி நிறுவனத்தின் சார்பில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 105 பேர் கடந்த 8-ஆம் தேதி வியட்நாமுக்கு சுற்றுலா சென்றிருந்தனர். அவர்களில் 32 இந்தியர்கள், 4 பணியாளர்களுடன் விசைப் படகில் ஹான் மே ரட் பகுதியில் இருந்து ஆன் தோய் துறைமுகம் நோக்கி பயணம் செய்தபோது, கடல் சீற்றம் காரணமாக படகு கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.

விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன் கடலோரக் காவல் படை, கடற்படை மற்றும் அருகிலிருந்த சுற்றுலாப் படகுகள் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டன. இந்த முயற்சியில் 21 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இருப்பினும், 15 இந்தியர்கள் உயிரிழந்தனர். மீட்கப்பட்டவர்களில் இருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: உடனே போங்க! படகு விபத்தில் சிக்கிய தமிழர்கள்! சேலம் DIG வியட்நாம் செல்ல முதல்வர் விஜய் உத்தரவு!

உயிரிழந்தவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் திருச்சி, சேலம், தருமபுரி, பழனி, வேலூர், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள். பெரும்பாலானோர் கைப்பேசி விற்பனை, விநியோகம் மற்றும் தொழில் துறையில் செயல்பட்டு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பலருக்கு மனைவி மற்றும் சிறு வயது குழந்தைகள் இருப்பது இந்த சோகத்தை மேலும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

விபத்தில் உயிர்தப்பிய பழனியைச் சேர்ந்த நிர்மல் குமார், "திடீரென மிகப்பெரிய அலை படகை தாக்கியது. சில விநாடிகளில் படகு சாய்ந்ததால் பலர் கடலில் தூக்கி வீசப்பட்டனர். பின்னர் மீட்புக் குழுவினர் எங்களை பாதுகாப்பாக மீட்டனர்" என்று தெரிவித்தார்.

இந்த விபத்தையடுத்து ஹனோய் மற்றும் ஹோ சி மின் நகரில் உள்ள இந்தியத் தூதரகங்கள் அவசர கட்டுப்பாட்டு அறைகளை அமைத்து உதவிகளை வழங்கி வருகின்றன. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

இதையும் படிங்க: உடனே போங்க! படகு விபத்தில் சிக்கிய தமிழர்கள்! சேலம் DIG வியட்நாம் செல்ல முதல்வர் விஜய் உத்தரவு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share