ஓசி பஸ் விமர்சனம்... பொன்முடியை வாண்டடாக வம்பிழுத்த நயினார் நாகேந்திரன்...!
திமுகவைச் சேர்ந்தவர்களே இத்திட்டத்தை ஓசி பேருந்து என கிண்டலடிப்பது தொடர்கதையாகி வருகிறது.
மகளிர் இலவச பேருந்து திட்டம் தமிழ்நாட்டில் திமுக அரசால் 2021-ல் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய சமூக நலத் திட்டம். பெண்களுக்கு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் இலவச பயண வசதியை வழங்கி பெண்களின் பயணச் செலவைக் குறைப்பதோடு, அவர்களின் பொருளாதார சுதந்திரத்தையும், பயண அணுகலை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆனால் திமுகவைச் சேர்ந்தவர்களே இத்திட்டத்தை ஓசி பேருந்து என கிண்டலடிப்பது தொடர்கதையாகி வருகிறது. ஆண்டிப்பட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், ஓசி பஸ் என குறிப்பிட்டு பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் இலவச பேருந்து சேவையைப் பயன்படுத்துவது குறித்து பேசியபோது, பெண்கள் எல்லாரும் ஓசி பஸ்ல தானே போயிட்டு இருக்கீங்க, உங்க கிராமத்திற்கு ரோடு போட்டதும் ஓசில தான் போகப் போறீங்க என பேசியுள்ளார்.
இதற்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திமுக எம்.எல்.ஏ. மகாராஜனை கடுமையாக கண்டித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கட்டணமின்றி பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிரை "ஓசி" என்று திமுகவைச் சார்ந்த ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. மகாராஜன் அவர்கள் விமர்சித்திருப்பது கண்டனத்துக்குரியது.
இதையும் படிங்க: பெண்களுக்கான விடியல் பயணம்; ஓசில தான போகப்போறீங்க.. சர்ச்சையில் சிக்கிய திமுக எம்.எல்.ஏ!!
இதற்கு முன் முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடி அவர்களும் இதே போன்று பேருந்துகளில் கட்டணமின்றி பயணிப்போரை "ஓசி" என்று தரம் தாழ்ந்து விமர்சித்ததும், திமுக பாராளுமன்ற உறுப்பினர் திரு.கதிர் ஆனந்த் அவர்கள் "ரூ.1000 வாங்கியதால் தானே பளபளனு இருக்கீங்க" என்று பெண்களைக் கொச்சையாக விமர்சித்ததும், திமுக மூத்த அமைச்சர் திரு.
துரைமுருகன் அவர்கள் "அம்மாவுக்கும் ரூ.1000, பொண்ணுக்கும் ரூ.1000" என சபை நாகரிகமன்றி விமர்சித்ததும் குறிப்பிடத்தக்கது.
மக்கள் நலனை மேம்படுத்தும் போர்வையில் திட்டங்களை அமல்படுத்தி அதன் விளம்பரங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதும், பின் பயனாளிகளை "ஓசி" என்று கீழ்த்தரமாக விமர்சிப்பதும் தான் திராவிட மாடல் போலும்!
ஒவ்வொரு முறையும் பெண் பயனாளிகளை விமர்சிப்பதில் காட்டும் முனைப்பை ஓட்டை உடைசலாக இருக்கும் பேருந்துகளை சரிபடுத்துவதிலோ அல்லது அனைத்து மகளிருக்கும் 1000 ரூபாய் கிடைப்பதை உறுதி செய்வதிலோ திமுக தலைவர்கள் காட்டாதது ஏன்?
அதிகார மமதையில், எளிய மக்களை எள்ளி நகையாடி ஏளனப்படுத்துவது ஏற்புடையதல்ல! மகளிரை அவமதிக்கும் திமுக அரசு இனியாவது திருந்தட்டும் ! என சகட்டு மேனிக்கு கடுமையாக சாடியுள்ளார்.
இதையும் படிங்க: முதலுக்கே மோசம்.. அதிமுக மனுக்களை ஏற்க கூடாது.. தேர்தல் அதிகாரிகளிடம் கடும் வாதம்!!