மத நல்லிணக்க பயணம்: திருச்சியில் மாற்றுத்திறனாளி சிறுவனை மகிழ்வித்த தவெக தலைவர் விஜய்!
திருச்சியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள தவெக தலைவர் விஜய், அங்குள்ள பச்சநாச்சி அம்மன் கோவில் மற்றும் நூருல் உதாக் பள்ளிவாசலுக்குச் சென்று மத நல்லிணக்கப் பயணம் மேற்கொண்டார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று திருச்சியில் மேற்கொண்ட அதிரடிப் பிரச்சாரப் பயணம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆன்மீக வழிபாடு மற்றும் மத நல்லிணக்க சந்திப்புகள் என விஜய்யின் இன்றைய நகர்வுகள் திருச்சியைப் பரபரப்பாக்கியுள்ளன.
திருச்சி - புதுக்கோட்டை சாலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ பச்சநாச்சி அம்மன் கோவிலுக்கு இன்று மாலை விஜய் வருகை தந்தார். அங்கு அம்மனுக்குச் சிறப்பு அர்ச்சனை செய்து வழிபாடு நடத்திய அவர், அம்மன் சன்னதியின் முன்பாகச் சாஷ்டாங்கமாகத் தரையில் விழுந்து வணங்கினார். கட்சித் தொடங்கிய பின் தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் விஜய், கோவிலில் இவ்வளவு எளிமையாக வழிபாடு நடத்தியது அங்கிருந்த பக்தர்களை வியப்பில் ஆழ்த்தியது.
கோவில் வழிபாட்டை முடித்துவிட்டு வெளியே வந்த விஜய்யைக் காண ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டிருந்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த தனது கட்சியின் இஸ்லாமியத் தொண்டர் ஒருவரின் மாற்றுத்திறனாளி மகனைப் பார்த்த விஜய், அச்சிறுவனை அருகில் அழைத்து அன்போடு பேசி, அவரோடு புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த நெகிழ்ச்சியான தருணம் அங்கிருந்த தொண்டர்களிடையே பலத்த கரகோஷத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: திருச்சியில் விஜய்! நாளை எம்.ஜி.ஆர் சிலை அருகே பிரம்மாண்ட தேர்தல் பிரச்சாரம்!
இதனைத் தொடர்ந்து, திருச்சி கே.கே. நகர் பகுதியில் சேசாயி நகர் செல்லும் வழியில் உள்ள நூருல் உதாக் பள்ளிவாசலுக்கு (Noorul Hudha Mosque) விஜய் சென்றார். அங்குப் பள்ளிவாசல் நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசிய அவர், அவர்களது கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். ஒரே நாளில் கோவிலும், பள்ளிவாசலும் சென்று விஜய் மேற்கொண்ட இந்த மத நல்லிணக்கப் பயணம், அவரது அரசியல் பாதையில் மிக முக்கியமான நகர்வாகப் பார்க்கப்படுகிறது. பின்னர் தனது பிரச்சார வேனில் ஏறி, திரண்டிருந்த பொதுமக்களுக்குக் கையசைத்தபடி அடுத்த கட்ட வாக்கு சேகரிப்பிற்கு அவர் புறப்பட்டுச் சென்றார்.
இதையும் படிங்க: சென்னையில் விஜய்யின் மெகா பிரசாரம்: 2 இடங்களுக்கு மட்டுமே அனுமதி! 3 இடங்களுக்கு முட்டுக்கட்டை!