×
 

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்.. கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள் வெளியீடு..!!

அதற்குப் பதிலாக நீர் சார்ந்த, மக்கக்கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

விநாயகர் சதுர்த்தி விழா வரும் செப்டம்பர் 14 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் சிலைகளைக் கரைக்க வேண்டும் என்ற முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன், பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில், களிமண்ணால் ஆன சிலைகளை மட்டுமே பயன்படுத்தி, மாசுபடாத முறையில் விழாவைக் கொண்டாட ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

விநாயகர் சதுர்த்தி பாரம்பரியமாக சிலைகளைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு, ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். ஆனால் நீர்நிலைகள் குடிநீர் ஆதாரமாக இருப்பதால் அவற்றைப் பாதுகாப்பது அவசியம். தமிழகம் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நீண்டகால பாரம்பரியத்தைக் கொண்ட மாநிலம். மத்திய மாசுகட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களின்படி (www.tnpcb.gov.in) (www.tnpcb.gov.in) மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டும் சிலைகளைக் கரைக்க வேண்டும் என ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார்.

முக்கிய வழிகாட்டுதல்கள் பின்வருமாறு: பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், பிளாஸ்டிக் அல்லது தெர்மோகோல் போன்ற பொருட்களால் செய்யப்பட்ட சிலைகளைக் கரைக்க அனுமதியில்லை. களிமண் உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களால் தயாரிக்கப்பட்ட சிலைகள் மட்டுமே அனுமதிக்கப்படும். சிலைகளின் ஆபரணங்களுக்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்ற இயற்கை பொருட்களைப் பயன்படுத்தலாம். பளபளப்பிற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் போதுமானவை. 

இதையும் படிங்க: கணபதி பப்பா மோரியா..!! கண்கவரும் வகையில்.. சென்னைக்கு கம்பீரமாக வந்த விநாயகர் சிலைகள்!!

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மோகோல் பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அலங்காரத்திற்கும் வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சிலைகளுக்கு வர்ணம் பூசும்போது நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயங்கள், எண்ணெய் வண்ணப் பூச்சுகள், எனாமல் அல்லது செயற்கை சாயங்களைப் பயன்படுத்தக் கூடாது. அதற்குப் பதிலாக நீர் சார்ந்த, மக்கக்கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். 

அலங்கார ஆடைகளுக்கும் இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களே சிறந்தவை. இதன் மூலம் நீர்நிலைகள் மாசுபடுவதைத் தடுக்க முடியும். மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரிய விதிமுறைகளின்படி சிலைகளைக் கரைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர், காவல்துறை கண்காணிப்பாளர் அல்லது மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரை அணுகலாம். 

விநாயகர் சதுர்த்தி தெய்வீக கொண்டாட்டம் மட்டுமல்ல; நமது சுற்றுச்சூழலின் அழகையும் தூய்மையையும் பாதுகாப்பதற்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் வாய்ப்பாகும். பொதுமக்கள் இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றி விழாவைச் சிறப்பாகக் கொண்டாட ஒத்துழைக்குமாறு ஆட்சியர் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: கணபதி பப்பா மோரியா..!! கண்கவரும் வகையில்.. சென்னைக்கு கம்பீரமாக வந்த விநாயகர் சிலைகள்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share