மதுரையில் 140 அடி உயர வ.உ.சி சிலை... குடியரசு துணை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார்!
மதுரையில் இன்று ஏ.சி.எஸ். அறக்கட்டளை சார்பில், கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் நினைவைப் போற்றும் வகையில் 140 அடி உயர வெண்கல சிலைக்கு குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார்.
சுதந்திரப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் தியாகத்தைப் போற்றும் வகையில், மதுரையில் அமையவுள்ள 140 அடி உயர பிரம்மாண்ட சிலைக்கு இந்தியக் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று அடிக்கல் நாட்டினார். ஏ.சி.எஸ். கல்வி மற்றும் அறக்கட்டளை சார்பில் இந்த சிலை நிறுவப்பட உள்ளது.
மதுரை கப்பலூர் பகுதியில் உள்ள பி.டி.ஆர். கல்லூரி வழங்கிய இரண்டரை ஏக்கர் பரப்பளவில் இந்த முழு உருவச் சிலை அமையவுள்ளது. சிலையின் முகம் வரை சென்று பார்க்க வசதியாக 2 மின்தூக்கிகள், நூலகம் மற்றும் பூங்காக்கள் இதில் இடம்பெறவுள்ளன. சுமார் ₹10 கோடி மதிப்பீட்டில், எந்தவித அரசியல் சார்புமின்றி ஏ.சி.எஸ். அறக்கட்டளை இந்தப் பணியை மேற்கொள்கிறது. அடுத்த 15 மாதங்களுக்குள் பணிகளை முடித்துப் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இந்தச் சிலையைத் திறந்து வைப்பார் எனப் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் தெரிவித்துள்ளார். இந்த விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், திரைத்துறையைச் சேர்ந்த நடிகர் விஜயகுமார், இயக்குநர் சுந்தர் சி உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் விழாவில் சிறப்பித்தனர்.
விழாவில் பேசிய குடியரசு துணைத் தலைவர், வ.உ.சி-யின் தேசபக்தி மற்றும் தியாகம் இளைய தலைமுறைக்கு எப்போதும் உத்வேகமாக இருக்கும் என்றும், அத்தகைய மாமனிதருக்கு மதுரையில் சிலை அமைப்பது வரலாற்றுச் சிறப்புமிக்கது என்றும் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: "பிப். 22-ல் அடிக்கல்.. பிரதமர் மோடி திறப்பார்" புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் பேட்டி!
மதுரையின் புதிய அடையாளமாக மாறவுள்ள இந்த வ.உ.சி சிலை, சுற்றுலாப் பயணிகளையும் வரலாற்று ஆய்வாளர்களையும் ஈர்க்கும் ஒரு முக்கிய மையமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: முடி மாற்று அறுவை சிகிச்சைக்கு கடும் கட்டுப்பாடுகள்: தமிழக அரசு அரசாணை வெளியீடு!