சமூக நீதி பாதுகாவலர்.. கலைஞரின் அன்பு நண்பர் அவர்.. வி.பி.சிங் வரலாற்றை நினைவுக்கூர்ந்த உதயநிதி..!
வி.பி.சிங் பிறந்தநாளை ஒட்டி தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவரது நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
வி. பி. சிங், ராஜா ராம் கோபால் சிங் மற்றும் ராதாகுமாரி தம்பதியரின் இரண்டாவது மகனாகப் பிறந்தார். அவரது தந்தை உத்தரப் பிரதேசத்தின் தையா சமஸ்தானத்தின் மன்னராக இருந்தவர். அலகாபாத் மற்றும் புனே பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்ற வி. பி. சிங், இளம் வயதிலேயே பொதுநலப் பணிகளில் ஆர்வம் காட்டினார். 1957 இல் வினோபா பாவேவின் பூமிதான இயக்கத்தில் பங்கேற்று, அலகாபாத் மாவட்டத்தில் உள்ள பாஸ்னா கிராமத்தில் தனது பண்ணையை தானமாக வழங்கினார்.
1969 இல் விபி சிங், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்து, உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து 1971 இல் மக்களவை உறுப்பினரான இவர், இந்திரா காந்தி அமைச்சரவையில் வர்த்தகத் துறை இணை அமைச்சராகப் பணியாற்றினார். 1980 முதல் 1982 வரை உத்தரப் பிரதேச முதலமைச்சராக இருந்தார். இருப்பினும், வழிப்பறி சம்பவங்களைக் கட்டுப்படுத்த முடியாததற்கு பொறுப்பேற்று அவர் பதவி விலகினார்.
இதையும் படிங்க: நான் உங்களில் ஒருவன்... மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றியே தீருவேன்... சபதம் எடுத்த முதல்வர் ஸ்டாலின்!
பின்னர்,ராஜீவ் காந்தி அரசில் நிதி மற்றும் பாதுகாப்பு அமைச்சராகப் பணியாற்றிய வி. பி. சிங், போஃபர்ஸ் ஊழல் குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தியதால் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறினார். 1987 இல் ஜன் மோர்ச்சா கட்சியைத் தொடங்கி, 1988 இல் ஜனதா தளத்தை உருவாக்கினார். 1989 தேர்தலில் தேசிய முன்னணி கூட்டணி, பாஜக மற்றும் இடதுசாரிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது, மற்றும் வி. பி. சிங் பிரதமரானார்.
இதனடையே இன்று வி.பி சிங் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அவரது நினைவுகளை தமிழக துறை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்துள்ளார். சாமானியர்களின் கைகளில் அதிகாரத்தை கொண்டு சேர்க்க தனக்கு கிடைத்த பிரதமர் பொறுப்பை பயன்படுத்திய சமூகநீதி காவலர் வி.பி.சிங் என்றும் மண்டல் குழு பரிந்துரையை நடைமுறைப்படுத்தியதன் மூலம் இந்தியாவின் அரசியல் போக்கையே தலைகீழாகப் புரட்டிப்போட்ட புரட்சியாளர் எனவும் கூறினார்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் உற்ற நண்பராக திகழ்ந்து இந்தியாவுக்கே சமூகநீதி வெளிச்சத்தை பாய்ச்சியவர் விபி சிங் என்றும் சமூகநீதி மற்றும் மதசார்பின்மையின் பக்கம் உறுதியாக நின்று ஆட்சி புரிந்து, அதன் காரணமாகவே பதவியையும் இழந்த தியாக வரலாற்றுக்கு சொந்தக்காரர் எனவும் புகழாரம் சூட்டினார்.
இத்தகைய சிறப்புக்குரிய வி.பி.சிங்க்கு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் வங்கக்கடலோரம் ஆளுயர சிலை வைத்து பெருமை சேர்த்தார் எனவும் உயரிய அதிகாரப் படிக்கட்டுகளில் எளிய மக்களை ஏற்றிவிட்ட வி.பி.சிங் அவர்களின் புகழ் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் நெஞ்சங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எத்தனை தடைகள் நம் தமிழினத்துக்கு? பாஜகவை திருத்துவோம்...அறுதியிட்டு கூறிய முதல்வர்!