பசங்களா..!! 3 டைம் பெல் அடிக்கும்போது தண்ணி குடிக்கணும்.. அமலுக்கு வந்தாச்சு வாட்டர் பெல் திட்டம்..!
பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்தது.
தமிழக அரசு 2025-ஆம் ஆண்டில் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி, திறன் மேம்பாடு, மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக பல புதிய திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் பசுமை முயற்சிகளை ஊக்குவிக்கும் விதமாக மிஷன் இயற்கை என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. காய்கறி தோட்டங்கள், மழை நீர் சேகரிப்பு, கழிவு மேலாண்மை, நெகிழி பயன்பாடு உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
மூன்றாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் எண்ணறிவு மற்றும் எழுத்தறிவு கற்பிக்கும் விதமாக எண்ணும் எழுத்தும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவுவதற்காகவும், பெண் கல்வியை ஊக்குவிக்கும் விதமாகவும் இல்லம் தேடி கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டது. தன்னார்வலர்களைக் கொண்டு மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், அறிவியல், பொறியியல், கணிதத்தில் மாணவர்களுக்கு ஆர்வத்தை உண்டாக்கும் வகையில் ஸ்டெம் திட்டம் கொண்டுவரப்பட்டது.
இதையும் படிங்க: போராடும் மாணவிகளை ஏன் அலைக்கழிக்கிறீங்க..? திமுக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி..!
அதுமட்டுமின்றி புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் உள்ளிட்டவைகளும் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அரசு பள்ளிகளில் சிசிடிவி பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்வாறு அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கவும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும் பல்வேறு முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக மாணவர்களின் நீர்ச்சத்து குறைபாட்டினை போக்குவதற்காக வாட்டர் பெல் என்ற திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது. தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்கள் உரிய நேரத்தில் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யவே இந்த வாட்டர் பெல் திட்டம். மாணவர்களுக்கு தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஊக்குவித்து, நீரிழப்பு மற்றும் அதனால் ஏற்படும் ஆரோக்கிய பிரச்னைகளை தடுப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். கேரளாவில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட இத்திட்டத்தை தமிழக அரசு பள்ளிகளில் அமல்படுத்த உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அண்மையில் அறிவித்திருந்தார்.
அதன்படி வாட்டர் பெல் திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி, காலை 11 மணி, பிற்பகல் 1 மணி, மாலை 3 மணி என பள்ளிகளில் மணி ஒலிக்கும்போது மாணவர்கள் தவறாது தண்ணீர் அருந்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வகுப்புச் சூழல் பாதிக்கப்படாத வகையில், பள்ளிகளில் 2 - 3 முறை வாட்டர் பெல் அடிக்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளில் கொண்டு வரப்பட்ட இந்த புதிய நடைமுறை பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: பதவிக்காக பெத்த அப்பனையே விட்டு போறாரு.. அன்புமணியை விளாசிய MLA அருள்..!