ஒன்றுக்கு மூன்றாக வசூலிப்போம்!! பொதுசொத்துகள் சேதம்?! மேற்குவங்க பாஜக அரசு வார்னிங்!
''மேற்கு வங்கத்தில் அமலான புதிய சட்டத்தின்படி, கலவரத்தில் அரசு, தனியார் சொத்துக்களை சேதப்படுத்துவோரிடம் இருந்து, சேதத்தின் மதிப்பை விட, மூன்று மடங்கு அபராதம் வசூலிக்கப்படும்,'' என, அம்மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி எச்சரித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் கலவரம் மற்றும் வன்முறையால் அரசு, தனியார் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். புதிய சட்டத்தின் கீழ், சேதப்படுத்தப்பட்ட சொத்தின் மதிப்பை விட மூன்று மடங்கு அபராதம் விதிக்கப்படும் என்றும், அபராதத்தை செலுத்த மறுத்தால் சம்பந்தப்பட்டவர்களின் சொத்துகள் ஏலம் விடப்பட்டு தொகை வசூலிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள பா.ஜ.க. அரசு, சட்டம்-ஒழுங்கை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கடந்த மாதம் 28-ஆம் தேதி மாநில சட்டசபையில் பொது அமைதியை பாதுகாக்கவும், திட்டமிட்ட வன்முறை மற்றும் சதித் திட்டங்களை தடுக்கும் வகையிலும் இரண்டு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த சட்டங்கள் மூலம் அரசுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தனது சொந்த தொகுதியான பவானிபூரில் தொழில் துறையினர் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் சுவேந்து அதிகாரி பேசினார். அப்போது, ஜனநாயகத்தில் அனைவருக்கும் அமைதியான முறையில் போராட்டம் நடத்த உரிமை இருப்பதாகவும், ஆனால் அந்தப் போராட்டம் வன்முறையாக மாறி தொழில் நிறுவனங்கள் அல்லது பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: ஜால்முரி பிரியர் பிரதமர் மோடி! மீண்டும் மசாலா பொரியை ருசித்த ருசிகரம்! வைரல் வீடியோ!
மேலும், தொழிற்சாலைகள் மற்றும் தனியார் நிறுவனங்களின் செயல்பாடுகளை பாதிக்கும் வகையிலான வன்முறை சம்பவங்களை அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று அவர் தெரிவித்தார். உதாரணமாக, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கு சேதம் ஏற்பட்டால், அதற்கு காரணமானவர்கள் மூன்று கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்றும், அந்தத் தொகையை செலுத்த மறுத்தால் அவர்களது சொத்துகளை அரசு சட்டப்படி ஏலம் விடும் என்றும் எச்சரித்தார்.
கூட்டத்தின் போது, உலகத் தரம் வாய்ந்த வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை மேற்கு வங்கத்தில் அமைப்பது தொடர்பாகவும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த முதல்வர், தரமான கல்வித் திட்டங்களுடன் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் முன்வந்தால், அவற்றை மாநிலத்தில் வரவேற்க அரசு தயாராக இருப்பதாக தெரிவித்தார். சட்டம்-ஒழுங்கை வலுப்படுத்துவதோடு, முதலீடு மற்றும் உயர்கல்வி வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிப்பதே அரசின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: சட்டம் ஒழுங்கு! நிதி பிரச்னைக்கு காரணம் முந்தைய அரசுதான்! திமுகவுக்கு குட்டு! கவர்னர் அர்லேகர் உரையில் தகவல்!