திக்... திக்... திருப்பம்...!! - எகிறி அடித்த இபிஎஸ் Vs விட்டுக்கொடுக்காத சிவிஎஸ்... அதிமுகவில் நடப்பது என்ன?
எஸ்.பி. வேலுமணி ஆதரவு எம்எல்ஏக்களான தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், கே.சி. வீரமணி உள்ளிட்ட 14 பேர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து மன்னிப்பு கடிதம் வழங்கினர். ஆனால், சி.வி. சண்முகம் மட்டும் மன்னிப்பு கடிதம் அளிக்கவில்லை.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி. வேலுமணி ஆதரவு எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியிருந்த நிலையில், தற்போது திடீர் திருப்பமாக இரு தரப்பினருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டுள்ளது. எனினும், சி.வி. சண்முகம் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு, எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தலைமையில் மற்றொரு அணியும் என அதிமுகவில் உட்கட்சி மோதல் ஏற்பட்டது.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்திற்கு ஆதரவாக, சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி அணியைச் சேர்ந்த 25 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். இதையடுத்து, கட்சியின் கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதாக குற்றம் சாட்டி, அவர்களின் கட்சி பதவிகளை எடப்பாடி பழனிசாமி பறித்தார். மேலும், கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அவர்களின் எம்எல்ஏ பதவிகளையும் ரத்து செய்ய கோரி சட்டப்பேரவைத் தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: மனுக்கள் முதல் முடிவுகள் வரை CVS தான்... அதிமுகவில் பிளவு இல்லை என S.P. வேலுமணி உறுதி..!
இதற்கிடையில், தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறாததால், எஸ்.பி. வேலுமணி தரப்பைச் சேர்ந்த சுகுமார், மோகன், நடராஜன், திலீப்பன் மற்றும் ஹரிபாஸ்கர் ஆகிய ஐந்து எம்எல்ஏக்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
மேலும், நான்கு எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததை தொடர்ந்து, எஸ்.பி. வேலுமணி அணியின் பலம் 15 ஆக குறைந்தது. இதையடுத்து, எஸ்.பி. வேலுமணி ஆதரவு எம்எல்ஏக்களான தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், கே.சி. வீரமணி உள்ளிட்ட 14 பேர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து மன்னிப்பு கடிதம் வழங்கினர். ஆனால், சி.வி. சண்முகம் மட்டும் மன்னிப்பு கடிதம் அளிக்கவில்லை.
மேலும், அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவர் மற்றும் கொறடாவை நியமிக்க கோரி பேரவைத் தலைவரிடம் தங்கள் தரப்பில் வழங்கப்பட்ட கடிதத்தையும் வேலுமணி அணியினர் திரும்பப் பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி. வேலுமணி, “அதிமுகவில் எந்தப் பிளவும் இல்லை; கருத்து வேறுபாடு மட்டுமே இருந்தது. தற்போது அந்த கருத்து வேறுபாடுகளும் நீங்கிவிட்டன. இனி ஒருங்கிணைந்த அதிமுகவாக செயல்படுவோம்” என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், “நாங்கள் எப்போதும் ஒரே கழகத்தில் தான் இருக்கிறோம். எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்ததே தவிர பிளவு எதுவும் இல்லை. ஆரம்பம் முதலே இதை தெளிவாக கூறி வந்தோம். தற்போது அந்த கருத்து வேறுபாடுகளும் முடிவுக்கு வந்துள்ளன. இனி ஒற்றுமையாகவும் வலுவாகவும் அதிமுக செயல்படும்” என்றார்.
இதற்கிடையில், எஸ்.பி. வேலுமணி, சி. விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் சி.வி. சண்முகத்துடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், சி.வி. சண்முகம் ஆவேசத்துடன் தனது இல்லத்திலிருந்து வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக தனது அலுவலகத்தில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய சி.வி. சண்முகம், “சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதில் நான் உறுதியாக இருக்கிறேன்” என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும், “கட்சிக்காக உண்மையுடனும் உணர்வுடனும் செயல்பட்டிருக்கிறேன். ஆனால், எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதமான அணுகுமுறை கட்சிக்கு நல்லதல்ல” என்றும் அவர் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேபோல், “என்னுடன் பயணிக்க விரும்புபவர்கள் பயணிக்கலாம். என் முடிவை ஏற்காதவர்கள் தங்களது விருப்பப்படி செயல்படலாம்” என்றும் சி.வி. சண்முகம் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், அதிமுகவின் இரு தரப்பினரும் வழங்கியுள்ள கடிதங்களை பரிசீலித்து, அவற்றின் மீதான முடிவை நாளை காலை அறிவிப்பதாக சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: “நீ நல்லா சாப்பிட்டிருக்க”... அமைச்சர் பேச்சால் கிளம்பிய சர்ச்சை..! வறுத்தெடுத்த அதிமுக..!!