717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா? இல்ல புரளியா? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி!
மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் முகவரிகளை RTI மூலம் வெளியிடாதது ஏன் எனக் கேள்வி எழுப்பி நயினார் நாகேந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழக அரசு மூடப்பட்டதாகக் கூறும் 717 டாஸ்மாக் கடைகளின் முகவரிகள் மற்றும் தகவல்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் வழங்கப்படாதது ஏன்?" என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தின் டாஸ்மாக் நிர்வாக மேலாண்மை மற்றும் மதுவிலக்குக் கொள்கை சார்ந்த புள்ளிவிவர விபரங்கள் அரசியல் களத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள தற்போதைய சூழலில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அரசுக்கு எதிராகக் கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு 717 டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டோம் என்று அரசு தம்பட்டம் அடித்துக் கொள்கிறது. ஆனால், மூடப்பட்ட கடைகளின் முகவரிகள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டபோது வழங்கப்படவில்லை. அந்தக் கடைகள் உண்மையிலேயே மூடப்பட்டனவா அல்லது வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனவா என்ற கேள்விகளுக்கும் RTI மூலம் சரியான பதில் கிடைக்கவில்லை என அவர் சாடியுள்ளார்.
இதையும் படிங்க: நீட்டை கொண்டு வந்ததே காங்கிரஸ் தான்! பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அதிரடி!
புதிய டாஸ்மாக் கடைகள் ஏதேனும் திறக்கப்பட்டுள்ளனவா என்ற கேள்விகளுக்கும் அரசு தெளிவான பதிலளிக்காமல் மென்று முழுங்குகிறது. 'அந்தந்த மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகவும்' என்ற ஒரே பதிலை மட்டும் கூறுவது ஏன்? அரசுக்குத் தரவுகள் இருக்குமாயின் அதை உடனடியாகச் சேகரித்து வெள்ளை அறிக்கையாக மக்கள் பார்வைக்கு வெளியிடத் தயங்குவது ஏன்? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
உண்மையிலேயே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளனவா அல்லது மக்களிடம் நற்பெயர் வாங்குவதற்காக இந்த அரசு புரளியைக் கிளப்பியதா? மக்கள் கேட்கும் இந்தக் கேள்விகளுக்குப் முதலமைச்சர் உடனடியாகப் பதிலளிக்க வேண்டும். வெட்டி வசனமும் வீண் விளம்பரமும் இனி கதைக்காகாது என்று அவர் கடுமையாக எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: மக்களை போதைக்கு அடிமையாக்குவது தவெக அரசுக்கு அழகல்ல..!! நயினார் நாகேந்திரன் விளாசல்..!!