×
 

3 தமிழர்கள் படுகொலை உறுதியாகியும் முதல்வர் எங்கே? தவெக அரசுக்கு சீமான் சரமாரி கேள்வி!

கர்நாடகாவில் 3 தமிழர்கள் திட்டமிட்டு கொலை என உடற்கூறாய்வில் உறுதியாகியும் எங்கே சென்றார் முதல்வர் என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் திட்டமிட்ட படுகொலை என்பது உடற்கூறாய்வு அறிக்கையின் மூலம் வெளிச்சத்திற்கு வந்த பிறகும் கூட, தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அதுகுறித்து எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதியாகக் கடந்து செல்வது பெருத்த ஏமாற்றமளிப்பதாகவும், ஆளும் தவெக அரசின் இந்த அலட்சியப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் ஆவேசமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விரிவான கண்டன அறிக்கையில், சுடப்பட்ட மூன்று தமிழர்களும் 10 அடிக்கும் குறைவான மிகக் குறுகிய தூரத்திலிருந்து துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளனர் என்பதும், சுடப்பட்டவர்களில் ஒருவரான ஜான்ரோஸ் பீட்டரின் காதுப் பகுதியிலிருந்து நெஞ்சு வரை 25 செ.மீ. நீளத்திற்கு ஆழமான காயம் உள்ளது என்பதும் உடற்கூறாய்வில் அப்பட்டமாக நிரூபணமாகியுள்ளது.

மேகதாது அணை விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கு இடையே பதற்றம் நிலவும் சூழலில், இது தமிழ்த் தேசிய இனத்தின் மீது நடத்தப்பட்ட அப்பட்டமான திட்டமிட்ட இனப்படுகொலையாகும். கர்நாடக எதிர்க்கட்சிகளே இதற்கு நீதி விசாரணை கோரும் நிலையில், தமிழ்நாட்டை ஆளும் தவெக அரசு கிணற்றில் போட்ட கல்லாக மௌனம் சாதிப்பது வேதனையளிக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பரந்தூர் நிலத்தில் பல்லாங்குழி ஆடும் தவெக அரசு! நயினார் நாகேந்திரன் கண்டனம்!

அண்டை மாநில முதல்வர்களின் நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டிய அவர், கடந்த காலங்களில் வடமாநிலத் தொழிலாளர்கள் விவகாரத்தின் போது பீகார் முதல்வர் நிதிஷ்குமார் குழு அமைத்துத் தமிழகத்திற்கு அனுப்பியதையும், சென்னை மௌலிவாக்கம் கட்டட விபத்தின் போது ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரடியாகக் களத்திற்கு ஓடோடி வந்து தன் மக்களுக்கு ஆறுதல் கூறியதையும் நாம் பார்த்தோம். 

ஆனால், 3 தமிழர்கள் அண்டை மாநிலத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகும், 'மக்களுக்கு ஒன்று என்றால் நான் முன்னால் நிற்பேன்' என்று மேடைகளில் முழங்கிய முதல்வர் விஜய் இப்போது எங்கே சென்றார்? படுகொலை செய்த வனத்துறையினர் மீது உடனடியாகக் கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்யக் கோராமல், வெறும் விசாரணைக் குழு அமைக்கக் கோருவது குற்றவாளிகள் தப்பிக்க வழிவகுக்கும் கண் துடைப்பு நாடகம் எனச் சாடினார்.

மேலும், கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் திமிரோடு பேசிய பிறகும், தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாட்டில் மேகதாது குறித்து அவர் பேசிய போதும்கூட முதல்வர் விஜய் தமிழகத்தின் உரிமைகள் குறித்தோ, 3 தமிழர்களின் படுகொலை குறித்தோ துளி அளவும் வாய் திறக்காதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். 

எனவே, கொலையாளிகளான கர்நாடக வனத்துறையினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கவும், உயிரிழந்த தமிழர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.1 கோடி இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத்தரவும் கர்நாடக அரசுக்குத் தமிழ்நாடு அரசு உடனடி அழுத்தம் கொடுக்க வேண்டும் என சீமான் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: தவெக-வின் முகமூடியை கிழிப்போம்! ஆளுநரை சந்தித்த பின் டிடிவி தினகரன் ஆவேசம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share