×
 

இது எலக்ஷன் டைம்..!! இந்த நேரத்துல நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் எதுக்கு..?? ப.சிதம்பரம் சரமாரி கேள்வி..!!

தேர்தல் நேரத்தில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் ஏன் என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி நேற்று முன்தினம் நிறைவடைந்த நிலையில், மகளிர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்தும் நோக்கில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543-இலிருந்து 816 ஆக உயர்த்துவதற்கான மசோதாக்களை நிறைவேற்றுவதற்காக சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வரும் 16-ம் தேதி மீண்டும் கூட்டப்பட உள்ளது.

இந்த சிறப்புக் கூட்டம் மூன்று நாட்கள் (16, 17, 18) நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு உறுதிப்படுத்தியுள்ளார். மத்திய அரசு இந்த அவசரக் கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரம் இன்று செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் இது குறித்து கடுமையாக விமர்சித்தார். “வரும் 16, 17, 18 ஆகிய தேதிகளில் இரு அவைகளையும் கூட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543-லிருந்து 816 ஆக அதிகரிப்பது மற்றும் தொகுதிகளை மறுவரையறை செய்வது தொடர்பான மசோதாக்களை கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் பெரும் ஆபத்துகள் உள்ளன” என்று அவர் கூறினார்.

இதையும் படிங்க: ஒன்றரை நாள் தேவையை மட்டுமே பூர்த்தி செய்யும்! 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி குறித்து ப.சிதம்பரம் கருத்து!

சிதம்பரம் மேலும் கூறியதாவது: தமிழ்நாட்டில் தற்போது 39 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இவை அனைத்தும் பாஜகவுக்கு எதிரான கட்சிகளின் பிரதிநிதிகளால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றன. அதேபோல் மேற்கு வங்காளத்தில் 42 தொகுதிகளில் 28 தொகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் உள்ளனர். இவ்வாறு மொத்தம் 67 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்கள் அவைக்கு வர முடியாத சூழலை உருவாக்கி மசோதாக்களை நிறைவேற்ற அரசு முயற்சி செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

“எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து எதிர்த்து வாக்களித்தால் இந்த மசோதாக்கள் இரு அவைகளிலும் தோல்வியடையும். அதைத் தடுக்கவே தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளத்தில் தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் அவசரமாக அவையைக் கூட்டுகிறார்கள். இது திட்டமிட்ட சதி. அரசியல் சாசனத்திற்கு எதிரான மோசடி நடவடிக்கை. 67 உறுப்பினர்களை ஒதுக்கி வைத்துவிட்டு என்ன அரசியல் சாசன திருத்தத்தை நிறைவேற்றப் போகிறீர்கள்?” என்று சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.

எதிர்க்கட்சிகள் சார்பில், தேர்தல்கள் முடிந்த பிறகு ஏப்ரல் 29-ம் தேதி அவையைக் கூட்டுமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் நாடாளுமன்றத்தில் மேலும் குறையும் என்ற அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அவசர நடவடிக்கையை கடுமையாகக் கண்டித்த சிதம்பரம், “இது ஜனநாயகத்திற்கு எதிரான செயல்” என்றும் விமர்சித்தார்.

இதையும் படிங்க: மும்மொழிக் கொள்கை: மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்த ஸ்டாலின்.. ரியாக்ட் செய்த தர்மேந்திர பிரதான்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share