×
 

விவசாய நில வகைமாற்ற சட்டத்திருத்த மசோதாவை கைவிடுக! தமிழக அரசுக்கு சிபிஐ எச்சரிக்கை!

விவசாய நிலத்தை வகை மாற்றம் செய்ய உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி கட்டாயம் என்பதை நீக்குவதற்கான சட்ட திருத்த மசோதாவை கைவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

விவசாய நிலங்களை மேம்பாட்டுத் திட்டங்களுக்காக வகைமாற்றம் செய்வதற்கு உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயம் என்ற நடைமுறையை நீக்குவதற்காகத் தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ள சட்டத் திருத்த மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் மிகக் காட்டமாக வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், தமிழ்நாட்டில் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்கள் என்ற பெயரில் வேளாண் விளைநிலங்களைப் பயன்படுத்துவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இது மிகுந்த கவலையளிக்கும் செயலாகும். விளைநிலங்கள் கான்கிரீட் காடுகளாக மாறுவதால் விவசாய நிலங்களின் பரப்பளவும், உணவுப் பொருட்களின் ஒட்டுமொத்த உற்பத்தியும் பெருமளவு குறைந்து, நாட்டின் எதிர்கால உணவுப் பாதுகாப்புக்கே பெரும் அச்சுறுத்தல் ஏற்படும். மேலும், விவசாயிகளின் வாழ்வாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து அறிக்கையில் சாடியுள்ள அவர், விவசாய நிலங்களை மேம்பாட்டுத் திட்டங்களுக்காக வகைமாற்றம் செய்வதற்கு இருந்துவந்த கட்டுப்பாடுகளையும் தடைகளையும் தளர்த்த தமிழ்நாடு அரசு தீவிரமாக முயல்கிறது. 

இதையும் படிங்க: அரசாங்கத்தின் தொழிலாளர் கொள்கை என்ன? ஆகஸ்ட் 28-ல் டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

கடந்த 2017-ஆம் ஆண்டு விவசாய நிலங்களை நில வகைப்பாடு மாற்றுவதற்கு விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் நோக்கில், தற்போது நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் சட்ட மசோதா ஒன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

நில மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்த நன்செய் வகைப்பாட்டு நிலங்களைப் பயன்படுத்தும் போது, அதற்கு உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெறுவது கட்டாயம் என்ற விதியை இந்த மசோதா நீக்க வழிவகை செய்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளார்.

கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளிடம் இருக்கும் இந்த முதன்மையான அதிகாரத்தைப் பறித்து, நேரடியாக நகர் மற்றும் ஊரக அமைப்பு இயக்குநருக்கு மாற்றுவது மக்களாட்சித் தத்துவத்தின் கீழ் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை அப்பட்டமாகப் பறிக்கும் செயலாகும். 

இது வேளாண்மையையும், விவசாயிகளையும் மேலும் நெருக்கடிக்குள் தள்ளிவிடும். எனவே, தமிழ்நாட்டின் உணவுப் பாதுகாப்பையும், உழவர் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தையும், உள்ளாட்சி அமைப்புகளின் சுயாட்சியையும் சீர்குலைக்கும் இந்த ஆபத்தான சட்டத் திருத்த மசோதாவைத் தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: டெல்டாவில் வறட்சி அலர்ட்.! CPI கட்சியினர், விவசாயிகள் முற்றுகை..! திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share