டெல்டாவில் வறட்சி அலர்ட்.! CPI கட்சியினர், விவசாயிகள் முற்றுகை..! திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு..!!
சிபிஐ கட்சியினர் மற்றும் விவசாயிகள் இணைந்து திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினரும் விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என்ற முக்கிய கோரிக்கையை முன்வைத்தே இந்த முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.காவிரி நதியில் போதிய தண்ணீர் வராத காரணத்தால் இந்த ஆண்டு குறுவை சாகுபடி பெரும்பாலான பகுதிகளில் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
மேட்டூர் அணையில் இருந்து வழக்கமான நேரத்தில் நீர் திறக்கப்படாததால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்தனர். நிலத்தடி நீரை நம்பி சிலர் சாகுபடி செய்தாலும் பெரும்பான்மையான விவசாயிகளுக்கு அந்த வாய்ப்பும் இல்லாமல் போனது. இதனால் பயிர் இழப்புடன் கடன் சுமையும் அதிகரித்துள்ளது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் அறிக்கை வெளியிட்டு டெல்டா மாவட்டங்களின் ஆட்சியர் அலுவலகங்களுக்கு முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி திருவாரூரில் கட்சியினரும் விவசாயிகளும் ஒன்று திரண்டனர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் டெல்டாவை வறட்சிப் பகுதியாக அறிவிக்க வேண்டும், விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் உதவித் தொகை அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: கௌரவ விரிவுரையாளர்களுக்கு 12 மாத ஊதியம் வழங்குக.... இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!
மேலும் விவசாயிகளின் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. வறட்சி பாதித்த பகுதிகளில் குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
காவிரி டெல்டா தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழ்கிறது. ஆனால் தொடர்ந்து நீர் பற்றாக்குறை காரணமாக விவசாய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரசு உடனடி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டம் நடைபெற்றது. போலீசார் அமைத்த தடுப்புகளை தாண்டி போராட்டக்காரர்கள் செல்ல முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்ற எதிர்பார்ப்புடன் போராட்டக்காரர்கள் கோரிக்கை மனுவை சமர்ப்பித்தனர்.
இதையும் படிங்க: அரிசி, சர்க்கரை விலை உயர்வை கட்டுப்படுத்துக! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தல்!