"சினிமாவில் ஹீரோ, ஆட்சியில் ஜீரோ" தவெக அரசை கடுமையாக சாடிய திமுக வழக்கறிஞர் அணி பரந்தாமன்!
விஜய் ப்ரோ நீங்க சினிமாவில் ஹீரோவாக இருக்கலாம் ஆனால் ஆட்சி அதிகாரத்தில் ஜீரோவாக இருக்கிறீர்கள் என திமுக வழக்கறிஞர் அணி பரந்தாமன் பேசியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சபரிவர்மன் லாக்-அப் மரணமடைந்த விவகாரத்தில், தமிழகத்தின் தற்போதைய தவெக அரசை திமுக வழக்கறிஞர் அணியின் இணைச் செயலாளர் பரந்தாமன் மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தவெக அரசின் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு மற்றும் திசைதிருப்பும் அரசியல் குறித்துப் பரபரப்புக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சபரிவர்மனை தவெக அரசு படுகொலை செய்துள்ளது. வெறும் 200 கிராம் குட்கா வைத்திருந்ததாகச் சொல்லி, காவல்துறையினர் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்று லாக்-அப்பில் டார்ச்சர் செய்துள்ளனர். கடந்த 10-ஆம் தேதி நன்றாக இருந்த சபரிவர்மன் 13-ஆம் தேதி மரணமடைந்துள்ளார். அவரது உடலில் பல இடங்களில் காயங்கள் உள்ளன. அவரது குடும்பத்தினர் கடந்த இரண்டு நாட்களாக நீதிக்காகப் போராடி வரும் வேளையில், முதலமைச்சர் விஜய் சினிமா சூட்டிங்கில் பிசியாக இருக்கிறார்.
உளவுத்துறை இந்த லாக்-அப் மரணம் குறித்துத் தெரிவித்தும், அதைத் திசைதிருப்புவதற்காக முதலமைச்சர் பெரம்பூருக்குச் சென்று அரசியல் செய்கிறார். தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்து சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. கடந்த ஆட்சியில் காவலாளி அஜித் குமார் வழக்கில் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு அன்றைய முதலமைச்சர் மன்னிப்பு கேட்டபோது, 'சாரி வேண்டாம் எங்களுக்கு நீதி வேண்டும்' என விஜய் கேட்டார். ஆனால், தற்பொழுது 'ரீல்ஸ் வேண்டாம், நீதி வேண்டும்' என தமிழ்நாடு மக்கள் முதலமைச்சர் விஜய்யைப் பார்த்துக் கேட்கிறார்கள். விஜய் ப்ரோ, நீங்கள் சினிமாவில் ஹீரோவாக இருக்கலாம், ஆனால் ஆட்சி அதிகாரத்தில் ஜீரோவாக இருக்கிறீர்கள்.
இதையும் படிங்க: "3 மாதங்களில் கூட ஜோசப் விஜய் வீட்டுக்குப்போகலாம்!" – அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தாக்கு!
தொடர்ந்து பேசிய பரந்தாமன், லஞ்சம் பெற்ற குட்கா வழக்கில் தொடர்புடைய விஜயபாஸ்கரை அருகில் வைத்து தவெக அரசு சிவப்பு கம்பளம் விரிப்பதாகக் குற்றம் சாட்டினார். மேலும், "குளித்தலையில் மாற்றுத்திறனாளி ஒருவரைக் கைது செய்யும் இதே தவெக அரசு, பெண்ணுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபட்டுள்ளதாகச் சொல்லப்படும் நிலையிலும், அவர் மீது வழக்கு பதியாமல் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் தவெக-வினர் என்றால் ஜாமீனும், சாமானியர்கள் என்றால் சாவும் கொடுக்கும் அரசாக இது உள்ளது. குதிரைப் பேரத்தில் ஈடுபட்டு குதிரைகளுக்கு விலை கொடுக்கும் விஜய் அரசுக்கு, மனித உயிர்களின் மீதான மதிப்பு தெரியவில்லை என்று சாடினார்.
எங்களிடம் லஞ்சம் இல்லை என்ற மாயையை உருவாக்குவதற்காகத் தற்போது அதிகாரிகளைக் காவு வாங்குகிறார்கள். அதிகாரிகளைப் பணியிடை நீக்கம் செய்வது வெறும் ஏமாற்று வேலை. இந்தச் சம்பவத்திற்குப் பின்னால் பெரிய சதி இருக்கிறது. சபரிவர்மன் மரணம் தொடர்பாகச் சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட காவல்துறையினரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். நடவடிக்கை எடுக்க அரசுக்குக் கால அவகாசம் தருவோம். தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில், இந்த லாக்-அப் மரணம் தொடர்பாக சிபிஐ (CBI) விசாரணை கோரி நீதிமன்றத்தை திமுக நாடும் என்று பரந்தாமன் எச்சரித்தார்.
செய்தியாளர் சந்திப்பின் போது, தவெக அமைச்சர் நிர்மல் குமார் எழுப்பியுள்ள விமர்சனங்கள் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த பரந்தாமன், ஒரே கட்சியிலிருந்து கொள்கை ரீதியாக வந்தவர்களுக்கு எங்களால் பதில் சொல்ல முடியும். ஆனால், பல கட்சிகளுக்குத் தாவி மாறி வந்த அமைச்சர் நிர்மல் குமார் போன்றவர்களுக்குப் பதில் சொல்ல முடியாது" என்று மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துப் பேசினார்.
இதையும் படிங்க: அதிமுக கட்டமைப்பை திருட விஜய் பார்க்கிறார்! முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு!