பாலிவுட் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில், பிரபல இயக்குநர் ரோகித் ஷெட்டியின் குடியிருப்பு கட்டிடத்தின் மீது மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.45 மணியளவில் மும்பையின் முக்கியமான பகுதிகளில் ஒன்றான ஜூகு பகுதியில் நடைபெற்றுள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த தாக்குதலில் இயக்குநர் ரோகித் ஷெட்டி உட்பட கட்டிடத்தில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்தியில் ‘கோல்மால்’ தொடர், ‘சிங்கம்’, ‘சிம்பா’, ‘சூர்யவன்ஷி’, ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ உள்ளிட்ட பல மெகா ஹிட் திரைப்படங்களை இயக்கியவர் ரோகித் ஷெட்டி. ஆக்ஷன், காமெடி, மசாலா கலந்த வணிகப் படங்களுக்கு பெயர் பெற்ற இவர், பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குநர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார். இந்நிலையில் அவரது வீட்டையே குறிவைத்து நடந்த இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம், திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரோகித் ஷெட்டி, ஜூகு பகுதியில் உள்ள தனது சொந்தமான 9 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த கட்டிடத்தின் கீழ் உள்ள சில தளங்களை அவர் வாடகைக்கு விட்டுள்ள நிலையில், கடைசி இரண்டு மாடிகளில் மட்டும் தனது குடும்பத்துடன் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நடந்த நேரத்தில் ரோகித் ஷெட்டி வீட்டிலேயே இருந்ததாகவும், அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: விருது வழங்க ஒரு நேர்மை இருக்கணும்..! உங்க ஆளுங்களுக்கே கொடுக்க கூடாது.. காட்டமாக பேசிய இயக்குநர் சேரன்..!

நள்ளிரவு நேரத்தில், இருசக்கர வாகனத்தில் வந்ததாக சந்தேகிக்கப்படும் மர்ம நபர்கள், ரோகித் ஷெட்டியின் குடியிருப்பு கட்டிடத்தை நோக்கி திடீரென துப்பாக்கியால் சுட்டுள்ளனர். சுமார் சில நிமிடங்கள் தொடர்ந்து நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில், பல குண்டுகள் கட்டிடத்தின் முதல் மாடியில் உள்ள சுவர் மற்றும் பால்கனி கண்ணாடி பேனல்களை துளைத்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக கண்ணாடிகள் உடைந்து சிதறியதால், பெரும் சத்தம் எழுந்துள்ளது.
இந்த தாக்குதலின் சத்தத்தை கேட்ட கட்டிட காவலாளி, உடனடியாக வெளியே வந்து நிலைமையை பார்வையிட்டுள்ளார். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த காவலாளி, உடனடியாக காவல் துறைக்கு தகவல் அளித்துள்ளார். தகவல் கிடைத்ததும், மும்பை போலீசின் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தாக்குதலுக்கு உள்ளான முதல் மாடியில் ரோகித் ஷெட்டியின் தனிப்பட்ட உடற்பயிற்சி கூடம் (ஜிம்) இயங்கி வந்தது தெரியவந்துள்ளது.
ஆசாமிகள் அந்த பகுதியை குறிவைத்து சுட்டுள்ளதாகவும், இது திட்டமிட்ட தாக்குதலாக இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் மூலம் துப்பாக்கி குண்டுகள் துளைத்த இடங்களில் இருந்து முக்கிய தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. மேலும், கட்டிடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். சிசிடிவி காட்சிகளில், சந்தேக நபர்களின் நடமாட்டம் பதிவாகியுள்ளதா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இதன் அடிப்படையில் தாக்குதலில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவத்துக்கு பின்னர், பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றதாக தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து, உள்ளூர் போலீசார் நான்கு பேரை மடக்கிப் பிடித்ததாக கூறப்படுகிறது. பிடிபட்ட நபர்களிடம் தீவிர விசாரணை நடத்திய பின்னர், அவர்கள் மும்பை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கும் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கும் உள்ள தொடர்பு குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக, போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதலின் பின்னணி, உண்மையான நோக்கம், யாரை குறிவைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்பது குறித்து பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
குறிப்பாக ரோகித் ஷெட்டிக்கு ஏதேனும் மிரட்டல் வந்ததா, முன்பாக எந்தவிதமான அச்சுறுத்தல் தகவலும் இருந்ததா என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து இதுவரை இயக்குநர் ரோகித் ஷெட்டி அதிகாரப்பூர்வமாக எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. ஆனால், அவரது குடும்பத்தினர் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர் தற்போது பாதுகாப்பு காரணங்களுக்காக போலீசாரின் ஆலோசனைகளை பின்பற்றி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தை தொடர்ந்து, அவரது குடியிருப்பின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பிரபல திரையுலக பிரமுகரின் வீட்டில் நடந்த இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம், மும்பை நகரின் பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது. குறிப்பாக ஜூகு போன்ற முக்கியமான மற்றும் பாதுகாப்பு அதிகம் உள்ள பகுதியில் இத்தகைய சம்பவம் நிகழ்ந்தது, பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த பலர் ரோகித் ஷெட்டியின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்தும், இந்த சம்பவத்தை கடுமையாக கண்டித்தும் வருகின்றனர். விசாரணை விரைவில் முடிவுக்கு வந்து, குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மொத்தத்தில், பிரபல இயக்குநர் ரோகித் ஷெட்டி வீட்டில் நடந்த இந்த நள்ளிரவு துப்பாக்கிச் சூடு சம்பவம், பாலிவுட் திரையுலகில் மட்டுமல்ல, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் இந்த வழக்கை மிக முக்கியமானதாகக் கொண்டு தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 370க்கும் மேற்பட்ட படங்கள்.. நடிப்பின் உச்சத்தை தொட்ட நடிகர்..! இன்று சினிமா உலகத்தைவிட்டு மறைந்ததால் அதிர்ச்சி..!